பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

‘சொல்ல மாட்டோம்; அவர்களாகத் தெரிந்துகொள்ளாத வரை நாங்களாகச் சொல்லவே மாட்டோம்!' என்று அவர்களில் மற்றொருத்தி சொல்ல, 'ஓய், அர்ச்சகரே! அந்த ஜதி ஜகதாம்பாளை நீர் அவசியம் தெரிந்துகொள்ளத்தான் வேண்டுமா?’ என்று கேட்டுக் கொண்டே ஊருக்குப் புதியவர் அர்ச்சகரின் பக்கம் திரும்ப, 'ஆம், அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது!' என்று அவர் தம் மடியிலிருந்த நவரத்தின மாலையை அழ மாட்டாக் குறையாகத் தொட்டுப் பார்த்துக்கொண்டே சொல்ல, 'அப்படியானால் கொஞ்சம் பொறும்; அதை நான் கண்டுபிடித்துச் சொல்கிறேன்!' என்று சொல்லிவிட்டு அவர் அந்த ஐந்து ஆரணங்குகளின் பக்கம் திரும்ப, 'எங்கே கண்டுபிடியுங்கள், பார்க்கலாம்?’ என்று அவர்களில் மற்றும் ஒருத்தி அவரை நோக்கி சவால் விட, 'அதற்கு நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும். அதோ தொங்குகிறதே, தூங்கா மணி விளக்கு, அதிலுள்ள ஐந்து சுடர்களையும் நீங்கள் தலைக்கு ஒன்றாகத் தூண்டிவிட வேண்டும்!' என்று அவர் சொல்ல, 'ஆஹா! அதற்கென்ன, அப்படியே தூண்டிவிடுகிறோம்!' என்று அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சுடராகத் தூண்டி விட்டுவிட்டு வர, கடைசியாகத் தூண்டி விட்டுவிட்டு வந்தவளைச் சுட்டிக் காட்டி, 'நீங்கள்தான் அந்த ஜதி ஜகதாம்பாள்!' என்று ஊருக்குப் புதியவர் சொல்ல, அவள் வியப்புடன் அவர் பக்கம் திரும்பி, 'அது எப்படித் தெரிந்தது உங்களுக்கு?’ என்று கேட்க, 'முதல் நால்வரும் சுடரைத் தூண்டிவிடும்போது தங்கள் விரலில் பட்ட எண்ணெயைத் தலையிலே தடவிக் கொண்டார்கள்; அதிலிருந்து அவர்கள் நால்வரும் உங்களுக்குத் தோழிகள் என்பதை நான் தெரிந்துகொண்டேன். ஐந்தாவதாகத் தூண்டிவிட்ட நீங்கள், உங்களுடைய விரலில் பட்ட எண்ணெயை விளக்கிலேயே தடவிவிட்டு வந்தீர்கள்; அதிலிருந்து உங்களை நான் ஜதி ஜகதாம்பாள் என்று தெரிந்து கொண்டேன்!' என்று அவள் விளக்க, ஜதி ஜகதாம்பாள் 'தா, தை’ என்று ஜதியோடு ஒரு