பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

வேண்டும்' என்று எல்லாப் பத்திரிகைக்காரர்களும் ஒருவர் பின் ஒருவராக அறிவிப்பாராயினர்.

பார்த்தார் அழகப்பர்; ‘பயந்தாங்கொள்ளிகள், கோழைகள்!' என்று அவர்களை மனமாறச் சபித்துக் கொண்டே, அவர்களுடைய விருப்பம்போல் தாம் எழுதியவற்றைத் தபாலிலேயே அனுப்பினார். என்ன காரணமோ தெரியவில்லை, சுவரில் எறிந்த பந்துபோல் அவை அவரிடமே திரும்பி வந்துகொண்டிருந்தன. 'வரட்டும், வரட்டும்!’ என்று அவர் ஏதோ ஒரு வஞ்சத்துடன் அவற்றை வாங்கி வைத்துக் கொண்டிருக்க, 'தபால் தலை வைத்து அனுப்பினால் அப்படித்தான் திரும்பி வரும். அது உங்கள் கதை பிரசுரமாகும் என்ற நம்பிக்கை உங்களுக்கே இல்லை என்று நீங்களே சொல்வதுபோல் இல்லையா? இனி தபால் தலை வைத்து அனுப்பாதீர்கள்!' என்று ஒரு நாள் தபாற்காரர் தன் சிரமத்தைக் குறைத்துக் கொள்வதற்காகச் சொல்ல, அதை அப்படியே நம்பி, அன்றிலிருந்து அவர் தபால் தலை வைக்காமல் அனுப்ப, திரும்பி வருவது நின்றது; ஆனால் பிரசுரமாகாமல் கொன்றது!

‘கொன்றது' என்றால் அவரை என்று நீங்கள் நினைத்துக் கொண்டு விடப் போகிறீர்கள்! அவரையல்ல; அவருடைய நம்பிக்கையை!

எல்லாப் பத்திரிகைக்காரர்களும் சேர்ந்து தம்மை எழுத்தாளராக விடாமல் செய்யும் இந்தச் சதியை எப்படி முறியடிப்பதென்று அவர் ஒரு நாள் யோசித்தார், யோசித்தார், அப்படி யோசித்தார். அந்த யோசனையின் முடிவில் தம்முடைய எழுத்தை அவர்கள் வடி கட்டுவதற்கு முன்னால் தாமே வடி கட்டி அனுப்பினால் என்ன என்று அவருக்குத் தோன்ற, அதன்படி எதை எழுதினாலும் அதை முதலில் அவர் தம் நண்பர்களுக்குப் படித்துக் காட்டி, அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்பாராயினர்.