பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

1

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

பத்மாவதி கதை

கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! இந்தப் பரங்கிமலைப் பதியிலே ‘பத்மாவதி, பத்மாவதி” என்று ஒரு பாவை உண்டு. அந்தப் பாவையாகப்பட்டவள் பட்டணத்திலே உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்ததால், தினந்தோறும் பஸ் ஸ்டாண்டிலே வந்து நிற்பதுண்டு. அவள் அவ்வாறு வந்து நிற்கும் போதெல்லாம் இரண்டு 'அரும்பு மீசைகள்’ அங்கே வந்து அவளை ‘டா'வடிப்பதுண்டு. அப்படி ஒரு நாள் ‘டா’ வடித்துக் கொண்டிருங் காலையில், அவள் 'தூ’ என்று கீழே துப்ப, ‘ஆஹா! அந்தக் கனி ரஸத்தைக் கீழே துப்புவதற்குப் பதிலாக என் மேலே துப்பியிருக்கக் கூடாதா? அந்த அளவுக்குக் கூடவா நான் பாக்கியம் செய்யவில்லை?” என்று எம். ஜி. ஆர். மீசை வருந்த, ‘வருந்தாதே தம்பி, வருந்தாதே! வருந்தி வருந்தி உள்ளம் உருகாதே! வருந்தாதே தம்பி, வருந்தாதே!’ என்று 'தூங்காதே தம்பி, தூங்காதே’ மெட்டில் சிவாஜி மீசை பாட, 'வேறு என்னடா வழி, தாங்க முடியவில்லையே என்னால்!' என்று அது துடியாய்த் துடிக்க, ‘இதோ வழி என்று இது சொல்லலுற்றது:

‘அந்த ஆரணங்கு பஸ்ஸில் ஏறியதும் நீயும் ஏறு: அவளுக்குப் பக்கத்தில் நில். கண்டக்டர் வந்து ‘டிக்கெட்' என்றதும் அவளுக்கும் சேர்த்து 'இரண்டு டிக்கெட்' என்று கேள்; அவள் முறைப்பாள். கலங்காதே; ‘வீட்டில் போட்ட சண்டை வீட்டோடு இருக்கட்டும்; வெளியே வேண்டாம்’ என்று அவளைப் பார்த்துச் சொல்லிவிட்டு, 'நீ கொடப்பா, இரண்டு டிக்கெட்’ என்று கண்டக்டரைப் பார்த்துச் சொல். அவன் ‘கணவன்-மனைவி சண்டையாக்கும்’ என்று