பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

293

மாட்டேன் என்கிறார்?’ என்று கேட்டால், ‘மெளன விரதம் அனுஷ்டிக்கிறார்!’ என்று சீடகோடிகள் சொல்வார்கள்.

இப்படியாகத்தானே சாப்பிடுவதற்கு மட்டுமே வாயைத் திறந்துகொண்டிருந்த அந்தப் பேயாண்டிச் சாமியாரின் பெருமை மாயாண்டிபுரமெல்லாம் பரவ, அந்தப் பெருமையைக் கேட்டு மிஸ்டர் விக்கிரமாதித்தர் ஒரு நாள் போய் அவரைப் பார்க்க, அவர் இவரைக் கண்டதும், ‘நான் போறேன், நான் போறேன்!' என்று தம் சடா முடியை விரித்துப்போட்டு ஆடிக்கொண்டே ஓட, 'இது என்ன ஆச்சரியம்! இத்தனை நாளும் பேசாத சாமி இவரைக் கண்டதும் பேசுது; இத்தனை நாளும் ஆடாத சாமி இவரைக் கண்டதும் ஆடுது, ஓடுது!’ என்று பக்தகோடிகள் மூக்கின் மேல் விரலை வைக்க, அதைக் கண்டு விக்கிரமாதித்தர் விழுந்து விழுந்து சிரிக்க, ‘என்ன சங்கதி? உங்களைக் கண்டதும் அவர் ஏன் ஓடுகிறார்? நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்?' என்று அவர்களில் ஒருவர் இவரைக் கேட்க, இவர் சொன்னதாவது:

‘இந்தப் பேயாண்டிச் சாமியார் பூர்வாசிரமத்தில் ‘பெருமாள்' என்னும் பெயர் பூண்டு என்னிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தான். மாதம் பிறந்து சம்பளம் வாங்கினால் போதும்-இவன் வீட்டுக்கும் போகமாட்டான்; ஆபீசுக்கும் வரமாட்டான். மறுநாள் மனைவி என்று சொல்லிக் கொண்டு இவனைத் தேடி ஒருத்தி வருவாள். ‘ஏன், நேற்று வீட்டுக்கு வரவில்லையா?' என்று கேட்டால், ‘வந்து நாலு நாள் ஆச்சுங்க!’ என்பாள். 'சரி, நீ போ! அவன் வந்ததும் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்!' என்பேன் நான். அவள் போனதும் இன்னொருத்தி வருவாள். 'நீ யாரம்மா? என்று கேட்டால், ‘பெண்சாதிங்க!’ என்று நெளிவாள். இங்ஙனம் 'மனைவி' என்ற பட்டத்துடனும், 'பெண்சாதி' என்ற பட்டத்துடனும் நாலு பெண்கள் இவனை மாதா மாதம் தேடிக்கொண்டு வருவார்கள். வாங்கிய சம்பளத்தைத்