பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

299

வெட்கப்பட்டு வைக்காமல், சொல்லாமலே வெட்கப்பட்டு வைத்தீர்களே, அந்த மட்டும் க்ஷேமம், உட்காருங்கள்!' என்று சிற்சபேசன் அவரை உட்கார வைத்துவிட்டு, 'இன்றிலிருந்து உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன்; என்னுடைய கேள்விக்குச் சரியான விடையைக் கண்டுபிடித்துக்கொண்டு வாருங்கள்!’ என்று சொல்ல, ‘ரொம்ப நல்லது; அப்படியே செய்கிறோம்' என்று அனைவரும் எழுந்து, அவரவர்கள் வீடு நோக்கிச் செல்வாராயினர்.

வழி நெடுக, 'பெண்களுக்கு அழகு எங்கே இருக்கும், பெண்களுக்கு அழகு எங்கே இருக்கும்?’ என்று ஒருவரையொருவர் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டும், அதி அதி தீவிரமாக யோசித்துக் கொண்டும் வந்த பெரியோர்கள், கடைசியில், 'சரி, பெண்களையே கேட்டுவிட்டால் போகிறது!’ என்று தம் தம் மனைவிமாரைத் தேடி அவசர அவசரமாக வீட்டுக்கு வருவாராயினர்.

வீட்டுக்கு வந்ததும், ‘ஏண்டி, பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறது?’ என்று தம் தர்மபத்தினியைக் கேட்டார் ஒருவர்; அவளோ, 'முதலில் உங்கள் தலையிலே என்ன இருக்கிறதென்று சொல்லுங்கள்; அதற்குப் பிறகு நான் பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறதென்று சொல்கிறேன்!' என்றாள். இன்னொருவர், 'ஏண்டி, பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறது?’ என்று தம் இல்லாளைக் கேட்டார்; அவளோ, ‘மூஞ்சைப் பார், மூஞ்சை! இப்படிக் கேட்க வெட்கமாயில்லை உங்களுக்கு?' என்று அவருடைய கன்னத்தில் ஓர் இடி இடித்துவிட்டுச் சென்றாள். மற்றொருவர் எடுத்த எடுப்பில் 'பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறது?' என்று தம் மனையாளைக் கேட்டுவிடாமல், ‘ஏண்டி, உன்னை ஒன்று கேட்க வேண்டும்; கோபித்துக் கொள்ளமாட்டாயே?’ என்ற 'பிள்ளையார்சுழி'யுடன் ஆரம்பிக்க, ‘என்ன, கேளுங்கள்!' என்று அவள் அவருக்குத் தைரியம்