பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

கொடுக்க, அதுதான் சமயமென்று 'பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறது?’ என்று அவர் அவளுடைய முகவாய்க் கட்டையைப் பிடிக்க, 'ஐயே! கேள்வியைப் பார், கேள்வியை?’ என்று அவள் அவருடைய கையைத் தட்டி விட்டுவிட்டுப் போவாளாயினள். மற்றும் ஒருவர் தம் மனையரசியைக் கண்டதும், 'பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறது?’ என்ற கேள்விக் கணையை உடனே தொடுத்து விடாமல் மெளனமாக நின்று முன்னும் பின்னுமாக அவள் அழகைப் பார்க்க, ‘என்ன, அப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்று அவள் ஒன்றும் புரியாமல் கேட்க, ‘ஒன்றுமில்லை; ஒரு நிமிஷம் இப்படி வந்து நில்!' என்று அவர் அவளுடைய தோளைப் பற்றி இழுத்து நிறுத்தி உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை அவளை ஊடுருவிவிட்டு, ‘இப்படிப் பார்த்தால் தெரியாதுபோல் இருக்கிறது; அழகிப் போட்டிக்கு வந்து நிற்கும் பெண்களைப்போல நீயும் நீச்சல் உடையில் வந்து நின்றால்தான் தெரியும்போலிருக்கிறது!' என்று முணுமுணுக்க, ‘அப்படியா சமாசாரம்? என்ன தெரிய வேண்டும், உங்களுக்கு?' என்று அவள் கேட்க, 'பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறதென்று தெரிய வேண்டும்!' என்று அவர் சொல்ல, 'அட கடவுளே! இப்பொழுது நீங்கள் எங்கே போய்விட்டு வருகிறீர்கள்? பெங்களுருக்கா, பாண்டிச்சேரிக்கா?' என்று அவள் அவருடைய வாயை முகர்ந்து பார்ப்பாளாயினள்.

இப்படி ஒரு நாள் அல்ல; இரண்டு நாட்கள் அல்ல; மூன்று நாட்கள் முயன்றும் பெண்களின் அழகு ரகசியத்தைத் தெரிந்து கொள்ள முடியாத முதியவர்கள் நான்காவது நாள் மாலை வாடிய முகங்களுடன் வந்து தங்கள் வாத்தியாருக்கு முன்னால் நிற்க, ‘என்ன, தெரிந்ததா?’ என்று வாத்தியார் கேட்க, ‘தெரியவில்லை; நீங்கள்தான் சொல்லவேண்டும்!' என்று அவர்கள் அனைவரும் சேர்ந்தாற்போல் கையை விரிக்க, வாத்தியார் சிரித்து, 'உண்மையில் அது எனக்கும்