பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

311


'இதென்ன வம்பு! எல்லாப் பெண்களும் போலீஸ்காரனைக் கண்டால் பயப்பட அல்லவா செய்வார்கள்? இந்தப் பெண் அவனைக் கலியாணமே செய்துகொள்கிறேன் என்கிறாளே? என்ன துணிச்சல்!' என்று வியந்த தகப்பனார், 'எங்கே தேடுவேன், போலீஸ்காரனை நான் எங்கே தேடுவேன்?' என்று தவிப்பாராயினர்.

இங்ஙனம் தவித்துக் கொண்டிருந்தகாலை ஒரு நாள் இந்த விஷயம் தெரிந்த அந்த ஊர்த் தடியன் ஒருவன் போலீஸ்காரர் வேடத்தில் திடீரென்று அவருடைய வீட்டுக்குள் நுழைந்து, ‘இப்படி ஒரு திருடன் வந்தானே, பார்த்தீர்களா?’ என்று அவரைக் கேட்க, ‘நான் யாரைப் பார்த்தேன்? உங்களைத்தான் பார்க்கிறேன்!' என்று அவர் சொல்ல, ‘என்னைத்தான் பார்க்கிறேன் என்றால் என்னையே நீங்கள் திருடன் என்கிறீர்களா, என்ன?' என்று அந்தப் போலீஸ்காரர் அவரைத் திருப்பிக் கேட்க, ‘ஏன் இருக்கக் கூடாது? இந்தக் காலத்தில்தான் போலீஸ்காரனே திருடன் வேடத்தில் வந்து திருடுகிறானே!' என்று அவர் சொல்ல, ‘யாரைப் பார்த்து அப்படிச் சொல்கிறீர்? நான் அசல் போலீஸ்காரனாக்கும்! இப்போது நினைத்தால்கூட உம்மைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்துகொண்டு போய் என்னால் லாக்-அப்பில் அடைத்துவிட முடியும், ஜாக்கிரதை!’ என்று போலீஸ்காரராக வந்த அந்தக் கீலீஸ்காரர் ஒரு துள்ளுத் துள்ள, அடுக்களையில் இருந்தபடி அதைக் கேட்டுக் கொண்டிருந்த பொன்னி அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்து, 'ஐயோ, அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள்!' என்று துடியாய்த் துடிக்க, அவளைக் கண்ட மாத்திரத்தில் ‘ஆ!' என்று வாயைப் பிளந்த கீலீஸ்காரர் அப்படியே மூர்ச்சை போட்டுக் கீழே விழுவாராயினர்.

‘என்ன வந்துவிட்டது இந்தப் போலீஸ்காரருக்கு? இப்படி விழுந்து விட்டாரே!' என்று பொன்னியின்