பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


‘ஒன்றுமில்லை; இத்தனை நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்களே, என்ன சமைத்துப் போடலாம் என்று யோசிக்கிறேன்!’ என்றாள் அவள்.

‘இந்த நேரத்திலாவது, உன்னைச் சமைக்க வைத்து நான் சாப்பிடுவதாவது? வா, ஜாலியாக வெளியே போய்ச் சாப்பிட்டுவிட்டு வரலாம்’ என்று அவன் அவளை ஓர் உயர்தர ஒட்டலுக்கு அழைத்துச் சென்று, மாடிப் பூங்காவில் அமர்ந்து மனம் மகிழச் சாப்பிட்டு, இனிய பீடாவை எடுத்து வாயில் போட்டு அதன் இன் சுவையை அனுபவித்துக் கொண்டே, ‘ஏழு வருஷத்து அரிப்பு என்று ஒர் ஏ கிளாஸ் படம் வந்திருக்கிறது; பார்த்துவிட்டுப் போவோமா?’ என்று கண் சிமிட்டிக்கொண்டே கேட்க, ‘ஏன், இப்போதிருக்கும் அரிப்பு போதாதாக்கும்?’ என்று அவள் அந்த ஏகாம்பரத்துக்காக அதைத் தட்டிக் கழித்துவிட்டு, அவனை மெல்ல வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வருவாளாயினள்.

வீட்டை அடைந்ததும் படுக்கையைத் தட்டிப் போட்டு விட்டு, ‘கொஞ்சம் இருங்கள்; பாலையாவது காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறேன்!’ என்று அவள் அங்கிருந்த பாலை எடுத்துக்கொண்டு அடுக்களைக்குத் தாவ, அவன் அதைத் தடுத்து, 'வேண்டாம், பிரேமா! அதையும் இன்று நான் பச்சையாகவே குடித்துவிடுகிறேன்!' என்று அவள் கையிலிருந்த பாலை வாங்கி 'மடக், மடக்'கென்று குடித்துவிட்டு, 'அப்பப்பா! அமுதம் போன்ற உன் கையால் இந்த அமுதமான பாலை வாங்கிக் குடித்து எத்தனை நாட்களாகி விட்டன!' என்று சொல்லிக்கொண்டே சென்று கதவைப் 'படா'ரென்று சாத்தித் தாளிடுவானாயினன்.

அவளோ, 'பாவி! பாலில் இரண்டு தூக்க மாத்திரைகளையாவது கலந்து கொடுக்கலாம் என்று பார்த்தால், அதற்கும் வழி இல்லாமல் செய்துவிட்டானே!' என்று பொருமிக் கொண்டே அவனிடமிருந்து இன்னும் கொஞ்ச நேரம் தப்புவதற்காக ரேடியோவைத் திருப்பி வைப்பாளாயினள்.