பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


அன்றும் நேரம் கழித்து வந்த முதலாளி, தம்மைக் கண்டதும் எழுந்து கேட்டைத் திறந்து விட்டுவிட்டு நின்ற காதரை நோக்கி, 'ஜாக்கிரதை! இன்றிலிருந்து நம்முடைய கம்பெனியின் தொழிலாளிகளில் ஒரு பகுதியினர் வேலைநிறுத்தம் செய்திருக்கிறார்கள். அவர்களில் யாராவது இங்கே வரக்கூடும்; உள்ளே விடாதே!' என்று எச்சரித்துவிட்டுச் செல்வாராயினர்.

அவர் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் சமையற்காரன் வந்து, 'காதர் எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா?’ என்று அவனைக் கேட்பானாயினன்.

‘என்ன உதவி?’ என்று காதர் கேட்க, ‘இன்று நான் அவசியம் சினிமாவுக்குப் போக வேண்டும்; உள்ளேயும் கொஞ்சம் பார்த்துக் கொள்கிறாயா?' என்று சமையற்காரன் கேட்பானாயினன்.

'போயும் போயும் இன்றுதானா சினிமாவுக்குப் போக வேண்டும்? அம்மா வேறு ஊரில் இல்லையே! அவர்கள் வந்த பிறகாவது போகக்கூடாதா?’ என்று காதர் கேட்க, ‘என்றைக்குத்தான் இங்கே ஒழிகிறது? இது எம். ஜி. ஆர். படம், காதர்! முதல் தடவை வந்தபோதே பார்க்க வேண்டுமென்று நினைத்தேன்; முடியவில்லை. இப்போது இரண்டாவது தடவையாக வந்திருக்கிறது. இன்றுதான் கடைசி நாள்; போனால் எப்பொழுது வருமோ, என்னவோ? கொஞ்சம் பார்த்துக் கொள்; எஜமான் இன்று கொஞ்சம் ‘ஓவ'ராகத் 'தண்ணி' போட்டிருக்கிறார். அநேகமாக அவர் நடுவே எழுந்து குரல் கொடுக்க மாட்டார். தப்பித் தவறிக் கொடுத்தால், 'சினிமாவுக்குப் போயிருக்கிறான்’ என்று சொல்லிவிடாதே! அவர் எப்போது கேட்கிறாரோ அப்போது, ‘இப்போதுதான் இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே போனான்' என்று சொல்; அதற்குள் நான் வந்து விடுவேன். என்ன, வரட்டுமா?’ என்று காதரின் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் அவன் நடையைக் கட்டுவானாயினன்.