பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

10

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

காடுவெட்டிக் கதை

"விக்கிரமாதித்தன் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக் கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன பத்தாவது கதையாவது:

'கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! 'காடுவெட்டி, காடுவெட்டி' என்று ஒரு கள்ளப் பயல் எங்கள் கொல்லிமலைச் சாரலிலே உண்டு. இது ஜனநாயக சோஷலிஸ யுகம் அல்லவா? இந்த யுகத்தில் அவனும் தன் தொழிலை ‘ஜனநாயக சோஷலிஸப் பாணி'யிலேயே செய்து வந்தான். அதாவது, ஜனங்களின் சம்மதத்துடன் இருப்பவர்களிடமிருந்து பிடுங்கி இல்லாதவர்களுக்குக் கொடுப்பதைத்தானே இந்தக் காலத்து அரசியல்வாதிகள் 'ஜனநாயக சோஷலிஸம்' என்கிறார்கள்? அதே மாதிரி அவனும் ஜனங்களின் சம்மதத்துடனே இருப்பவர்களிடமிருந்து கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக் கொடுத்து வந்தான்! ‘அடித்ததை அவ்வப்போது ஏழைகளுக்குக் கொடுத்து வந்தானா? அல்லது, சில சினிமா நடிகர்களைப் போல அளவுக்கு மீறித் தான் சேர்த்துக் கொண்ட பிறகு, மீதமானதை என்ன செய்வதென்று தெரியாமல் பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டுக் கொடுத்து வந்தானா?' என்று என்னைக் கேட்காதீர்கள்; அது வேறு சங்கதி!

இப்படியாகத்தானே சட்டத்துக்கும் போலீசுக்கும் சவால் விட்டுக்கொண்டு அவன் அந்தக் கொல்லிமலைச் சாரலிலே இருந்து வருங்காலையில், ஆனானப்பட்ட ஆதிசிவனையே அவ்வப்போது ஆட்டிப் படைத்து வந்த விரகதாபம் அவனையும் ஒரு நாள் ஆட்டிப் படைக்க, அதனால்