பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

கேட்க, 'தமிழனைத் தட்டி எழுப்பும் தமிழ்ப் பித்தனின் பேச்சைக் கேட்கப் போகிறேன்!' என அவன் சொல்ல, 'துங்கும் தமிழனல்லவா அந்தப் பேச்சைக் கேட்டு எழுந்திருக்க வேண்டும்? தூங்காத தமிழன் அதைக் கேட்டு என்ன செய்யப் போகிறான்?' என இவன் ஒரு வினா எழுப்ப, 'ஓ, நான் துங்கவில்லையா? அது இப்போதுதான் என் ஞாபகத்துக்கு வருகிறது!’ என அவன் இவனுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்வானாயினன்.

அதுதான் சமயமென்று, 'அப்பா, நம்பி! சேவை என்றால் இந்தக் காலத்தில் பிறர் பேசுவதைக் கேட்கப்போவது சேவையல்ல; நீயே பேசுவதுதான் சேவை. அதிலும் சும்மா பேசுவது சேவையாகாது; ஊரில் பெரிய மனிதர்கள் என்று பெயரெடுப்பதற்காக அவ்வப்போது கூட்டம் போடும் சிலரிடம் ஐம்பதோ, நூறோ முன் பணமாக வாங்கிக் கொண்டு பேசுவதுதான் சேவையாகும்!' என்று நஞ்சுண்ட கண்டன் சற்றே சேவையைப் பற்றி விளக்க, 'அதைக் கற்றுக்கொள்ளும் வரையிலாவது நான் கூட்டங்களுக்குப் போகவேண்டாமா?' என்று நம்பி கேட்க, ‘அவசியம் போகத்தான் வேண்டும்; அதுவரை வேண்டுமானால் போய் வா!’ என்று இவன் அவனை வாழ்த்தி, வழி கூட்டி அனுப்பி வைப்பானாயினன்.

இப்படியாகத்தானே பல கூட்டங்களுக்குப் போய் வந்ததன் காரணமாகத்தானோ என்னவோ, நம்பியாகப்பட்டவன் எதற்கெடுத்தாலும் எப்போது பார்த்தாலும், ‘என் மொழி தமிழ் என்பேன்; என் இனம் தமிழ் இனம் என்பேன்; என் அகம் தமிழ் அகம் என்பேன்!' என வீராவேசத்துடன் மார்பை முன்னால் தள்ளிக்கொண்டு முழங்க, ‘இதென்னடா, வம்பாய்ப் போச்சு!' என நினைத்த நஞ்சுண்டகண்டன், ‘யார் அப்பா இல்லை என்று சொன்னது? உன் மொழி தமிழ்தான்; உன் இனம் தமிழ் இனம்தான்; உன் அகம் தமிழ் அகம்தான்!' எனச் சந்தேகத்துக்கு இடமின்றிச் சொல்ல, 'ஓ, என் மொழி