பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

"சிருங்கேரி உன்னுடையது. நீ எப்போது வந்தாலும் வரவேற்க நாங்கள் இருக்கிறோம்" என்றார்.

இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு அதே அறையில் அதே வார்த்தைகளை நான் கேட்டேன். அவை என் காதில் ஒலிக்கின்றன. மகாஸ்வாமியின் வார்த்தைகள் அவை. அதே வார்த்தைகள் ! அதே புன்முறுவல் !

ஜகத்குரு உண்மையில் மகாஸ்வாமியின் வாரிசு தான். உண்மை! இது எனக்குப் பளிச்சென்று விளங்கியது. ஜகத்குருவின் புன்முறுவல் பூத்த உருவம் என் முன்னே மகாஸ்வாமியின் தோற்றத்தை நினைவுறுத்தி நிறுத்துகிறது. மணக்கண்முன் அவர் தோன்றுகிறார். ஜகத்குருவின் மீது படிந்து கரைந்து விடுகிறார். இந்த உண்மையைக் கண்டு கொண்டேன்.

ஆன்மிகச் செல்வம் முழுவதும் உள்ளவர் ஜகத்குரு. முன்னவரின் ஞானமும், அருளும், எல்லாம் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர். இந்த உண்மை அறிந்து கொண்டதால் ஒருபடி மேலே சென்றேன்.

எனது உள்ளத்துணர்ச்சி வெள்ளம்போல் கரை புரண்டு ஓடியது. முப்பத்து மூன்று ஜகத்குருவின் உருவங்களும் தோன்றின. பின் ஒன்றாயின. மகாஸ்வாமியின் உருவமாகப் பளிச்சிட்டன. மெதுவாக மகாஸ்வாமி உருவமும் மறைந்தது.

புன்முறுவல் மலர்ந்த முகத்துடன் என் எதிரே ஜகத்குரு வீற்றிருந்தார்.