இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கொடைகாண வேண்டுமென்றும் அருளைச் சிந்தும்
- குளிர்ந்தவிழி தனைக்காண வேண்டு மென்றும்,
நடைகாண வேண்டுமென்றும், இதழ்கள் சிந்தும்
- நகைகாண வேண்டுமென்றும், உடல்உ டுத்தும்
உடைகாண வேண்டுமென்றும் தமிழ்மு கத்தின்
- ஒளிகாண வேண்டுமென்றும், புதழ்தல் கேட்டுத்
தடைகாண நினைத்தாயோ அவர்க்கு நீ தான்?
- தற்பெருமை தேடுகின்ற சாவே, சொல்! சொல்!
இல்லாதார் இயலாதார் பசியைப் போக்க
- எத்தனையோ சத்திரங்கள் கட்டு வித்தார்;
எல்லாரும் இன்புற்றே இருக்கும் வண்ணம்
- எத்தனையோ கலைக்கூடம் கட்டுவித்தார்;
கல்லார்உள் ளார்இந்த நாட்டில் என்னும்
- கறைநீங்க ஒளிஓங்கப் பள்ளி யோடு
கல்லூரி கட்டுவித்தார்; அவர்க்கு நாங்கள்
- கல்லறையைக் கட்டுவிக்க லாமா, கூறு?
வாடிப்போய்க் கிடக்கின்ற செடிகளைப்பார்;
- வதங்கிப்போய்க் கிடக்கின்ற கொடிக ளைப்பார்;
ஆடிப்போய் நின்(று) அவர்முன் மகிழ்ச்சி தந்த
- அழகுமயில் சிலைமயிலாய் ஆன தைப்பார்;
ஒடிப்போய் அவர்முன்னர் கூவிக் கூவி,
- உளங்கவர்ந்த குயில்ஊமை ஆன தைப்பார்;
பாடிப்போய்க் காட்டுதற்குத் தலைவர் இன்றிப்
- பரிதவிக்கும் என்னைஇதோ பார் பார் சாவே!
மீரா கவிதைகள் 0 118