பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20


1. தாயே உயிரே


தாயே உயிரே தமிழே நினைவணங்கும்
சேயேன் பெறற்கரிய செல்வமே - நீயே
தலைநின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங்
கிலையென்றால் இன்பமெனக் கேது.

பாவால் தொழுதேத்திப் பாரில் நினையுயர்த்தும்
ஒவாப் பணிசெய்ய உன்னுகின்றேன் - நாவாழும்
மூவா முதலே முழுமைபெறும் செம்பொருளே
சாவா வரமெனக்குத் தா.

தென்பால் உகந்தாளும் தெய்வத் திருமகளே
என்பால் அரும்பி எழுமுணர்வை - அன்பால்
தொடுத்தே அணிதிகழச் சூட்டினேன் பாவாய்
அடிக்கே எனையாண் டருள்.

[பூங்கொடி]