பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41


20. உலகைக் காக்கின்றாள்


எண்ணி லடங்காத எத்தனையோ நன்மொழிகள்
மண்ணிற் பிறந்து வளமையுறாக் காலத்தே
தன்வளமை காட்டித் தனிப்பெருமை கொண்டிலங்கிச்,
சொன்மரபு மாறாமல் தூய நிலைநாட்டி,
வாழ்க்கைப் பெருநிலத்தை வளமாக்கிச் செம்மைதனைச்
சேர்க்கப் பொருள்நூலைச் செப்பிப் பெருமையொடு
செப்பமுறச் செய்தமையால் செந்தமிழென் றோதினரோ?
அப்பெருமை யாரே அறிந்துரைக்க வல்லார்கள்?
மெய்யுணர அன்புணர மேன்மைத் திறமுணர
உய்வகைகள் தேர்ந்தே உளந்தெளிய வையத்துள்
வாழ்வாங்கு வாழ வழிவகுத்துத் துன்பமெனும்
பேழ்வாய் எரிநரகில் பேதுற்று வீழாமல்
இம்மையினில் காக்கும் இணையில்லா ஓர்மறையால்
செம்பொருளைக் காட்டுவதால் செந்தமிழென் றோதினரோ?
நூல்மறைந்து போனாலும் நுண்மாண் நுழைபுலத்துக்
கால்மறைந்து போனாலும் காக்கும் அகத்தியனும்
பல்காப் பியந்தோன்றப் பாட்டு நெறியுரைக்குந்
தொல்காப்பி யனென்னுந் தூயோனுந் தோன்றியிங்கு
நம்மொழியைக் காப்பதற்கு நல்வரம்பு கட்டி அதைச்
செம்மையுறச் செய்தமையால் செந்தமிழாக் கண்டனரோ?
ஆரியம்போற் பேச்சற் றழிந்து சிதையாத
சீரிளமை கண்டவர்கள் செம்மைமொழி என்றனரோ?
நீரால் நெருப்பால் நிலைகுலைந்து போகாமல்
சீராய்த் திகழ்வதனால் செந்தமிழென் றோதினரோ?
முந்தைத் தமிழ்கெடுக்க மூண்டெழுந்த நோக்கமுடன்
எந்தத் துணைகொண்டிங் கெந்தமொழி வந்தாலும்
நோவுக்கும் அஞ்சோம் நொடிப்பொழுதில் வீழ்கின்ற
சாவுக்கும் அஞ்சோம் தமிழ்காப்போம் என்றெழுந்த
அஞ்சலிலாக் கூட்டத்தை ஆளவந்தோர் தாக்கியதால்
நெஞ்சிருந்து சிந்தி நெடிதோடுஞ் செங்குருதி
பாய்ந்து தமிழ்மொழியாம் பைங்கூழ் செழிப்பதனால்