பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57


32. பாடிக் கொண்டேயிருப்பேன்


பாடிக்கொண் டேயிருப்பேன் - என்

பைந்தமிழைச் செந்தமிழை நான்
-பாடிக்

ஓடிக்கொண் டேயிருக்கும் ஊறுஞ்செங் குருதி

ஒடா துறைந்தே ஓய்ந்திடும் நாள்வரை
-பாடிக்

கடும்பிணி கொடுஞ்சிறை கடுகி வந்தாலும்

கலக்கிடும் வறுமைகள் காய்ந்திடும் போதும்

இடும்பைகள் வந்தெனை எற்றிடு மேனும்

எதையும் அஞ்சிடேன் என்றுமே துஞ்சிடேன்
-பாடிக்

பதவியும் பட்டமும் பணங்களுங் காட்டிப்

பகட்டினும் எதற்கும் பணியேன் கைநீட்டி

முதுமொழி என்மொழி முத்தமிழ் மொழியை

மொய்ம்புறக் காத்திட முனைந்திடும் வழியைப்
-பாடிக்
[தாய்மொழி காப்போம்]