பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76


46. தமிழ் – என் தந்தை


முன்னைத் தமிழ் மொழியே! - உலகில்
          மூப்பறி யா முதலே!
என்னை மகன் எனவே - புவியில்
          ஏற்றமுடன் அளித்தாய்.

கற்றுத் தெளி வதற்கே - ஆசான்
          கண்டு பயிற் றுவித்தாய்
முற்றும் உணர்ந் தவனாம் - அந்த
          முன்னவன் வள்ளுவனாம்.

முத்தமிழ் வா ணர்கள்சூழ் - அவையில்
          முந்தி யிருந் திடவே
அத்தனே என்னை யுமோர் - சான்றோன்
          ஆக்கி மகிழ்ந் தனைநீ.

துாது கலம் பகமாய்ப் - பெருகும்
          தோழர்கள் பற் பலராம்
தீது விளைப் பவராய் - அமையின்
          செப்பித் திருத் துவைநீ.

குற்றமொன் றில் லதுவாம் - நல்ல
          கோல மனை யளித்தாய்
கற்றவன் கட் டியதே - அதுதொல்
          காப்பியம் என் பதுவே.

வாரி முகந் தெடுத்தே - இன்ப
          வாரி திளைப் பதற்கே
நேரிய செல் வங்கள்தாம் - தொகையில்
          நேடித் திரட்டி வைத்தாய்.