பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78



47. தமிழ் என் தெய்வம்

கோவில் எனது நெஞ்சம் - தனிலே
          கூடி யருள் புரிவாய்
காவியப் பா மாலை - அணிந்தே
          காத்திட வேண்டு மம்மா
நாவின் மிசை யிருப்பாய் - எனக்கு
          நல்ல மனந் தருவாய்
பாவினில் சொல் லிவெல்லாம் - சத்தி
          பாய்ந்து வர வேண்டும்

உன்றன் திருப் பெயரைச் - சொல்லி
          ஊரினை ஏய்த் திடுவோர்
நன்றென வா ழுகின்றார் - நின்றன்
          நன்மையை நா டுகிலார்
துன்றிய பண் பினரும் - உன்பால்
          தூயநல் லன் பினரும்
நின்று வருந் திடவே - செய்தல்
          நீதியின் பாற் படுமோ?

நெஞ்சில் உனை நினைந்தே - என்றும்
          நேர்மையில் நிற் பவரை
மிஞ்சும் வறு மையினால் - துன்பம்
          மேலிடச் செய் துநின்றாய்
வஞ்சனை செய் மனிதர் - அவர்க்கு
          வாழ்வுகள் தந் துநின்றாய்
வஞ்சியுன் சோ தனையோ? - எங்கள்
          வாழ்வெலாம் வே தனையோ?

நித்தம் உனைத் தொழுதே - எங்கும்
          நின்புகழ் பா டுமெனைப்
பித்தன் வெறி யனென்றே - உலகம்
          பேசுதல் காண் கிலையோ?
முத்தமிழ் தந் தபித்தால் - செல்வம்
          முன்னின்று தே டுகிலேன்
இத்தரை மீ தினிலே - வறுமை
          எத்தனை துன் பமம்மா!