பக்கம்:முத்தம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

"வாங்க, இந்த அறையில் வந்து உட்காருங்கள் என அழைத்துச் சென்றாள். அந்த அறை அற்புதமாக இருந்தது. பத்மா படிப்பதற்கு உபயோகிக்கும் அறை. புத்தக அலமாரிகள், மேஜை நாற்காலிகள், புத்தகங்கள் - சுவர்களில் அழகான படங்கள்-மனதுக்கு இனிமைதரும் சூழ்நிலை.

ரகுராமன் ரசித்தபடி உட்கார்ந்தான்.

'இந்தாங்க. சாப்பிடுங்கள்' என்று பழங்கள் பலவற்றை அவன் முன்வைத்தாள். -

அவன் எதிர்பாராத உபசரிப்பு இவையெல்லாம். அதனால் அவனுக்கு தயக்கம். சங்கோஜம். 'இதெல்லாம் என்னத்துக்கு-வீணாக'என்று இழுத்தான்.

அவள் சிரித்தாள். "வீணா இது! சாப்பிடுவது வீணா என்ன! காபி இதோ இருக்கு" என்று வெள்ளி டம்ளரில் காப்பியூற்றி மேஜைமேல் அவன் முன் வைத்தாள்.

கவர்ச்சியான வளைகள் அணிந்த அழகுக்கரம் அன்பாகப் பணியாற்றிய போதே அவன் பார்வையை வசியம் செய்தது. அழகு ரசிகனான அவனுக்கு மகிழ்வளித்தது. அவன் கண்கள் அவள் கையிலிருந்த் அவள் முகத்துக்குத் தாவின. மகிழ்வு விளையாடிக் கொண்டிருந்த எழில் முகம். 'அழகான கண்கள் பத்மா நல்ல அழகி. ரொம்ப அழகு...' ரகுராமன் திடுக்கிட்டான். தன் மனம் தறுதலைக் தனம் செய்வதாகத் தோன்றியது. கண்டித்து, பார்வையைத் தாழ்த்தினான். எனினும் அடிக்கடி பார்வை ஓடிக்கொண்டிருந்தது எதிரே யிருந்த அழகுச் சோலை மீது சிலசமயம் அவள் பார்வை வெட்டிவிடும் அவன் நோக்கை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/30&oldid=1496637" இலிருந்து மீள்விக்கப்பட்டது