அற்புதக் கொடை
71
"நான் ஒரு புலவன். உங்கள் பெருமையைப் பல புலவர்களின் வாயிலாகக் கேட்டிருக்கிறேன். எனக்கு உங்கள் தயை வேண்டும்."
"நான் இப்போது அரசரைப் பார்க்கச் செல்கிறேன். நீங்கள் எங்கள் ஊர் சென்று என் வீட்டில் இருங்கள். நான் நாளைக்கே வந்து விடுவேன். வந்த பிறகு உங்களோடு அளவளாவி இன்புறுவேன். உங்களுக்கு வேண்டியதை அறிந்து என் ஆற்றலுக்கு இசைந்த வகையில் அந்தக் குறையைப் போக்க முயலுவேன்" என்று கூறினார் செல்வர்.
"எனக்கு மிகவும் விரைவாகப் போக வேண்டியிருக்கிறது. எப்படியும் நாளை மாலைக்குள் எங்கள் ஊரில் இருந்தால்தான் நான் நினைத்த காரியம் கைகூடும்” என்றார் புலவர்.
"அப்படியானால் நானே உங்களை என் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்."
"அதற்கு அவசியமே இல்லை. எனக்கு வேண்டிய பொருள்களை நீங்கள் மனம் வைத்தால் இங்கேயே கொடுக்கலாம். ஆனால், அப்படிச் செய்வதற்கு நீங்கள் துணியவேண்டுமே!"
“என்னிடம் இப்போது உள்ளதைக் கேட்டால் கொடுத்துவிடுகிறேன். என் கையில் இருப்பது சிறு தொகைதானே?"
"எனக்குப் பணம் வேண்டியதில்லை. பண்டம் வேண்டியதில்லை. எங்கள் வீட்டில் திருமணம் நடக்க வேண்டும். என் மகன் மாப்பிள்ளைக் கோலம் புனைய இருக்கிறான். அவனுக்கு ஆடை அணிகள் இல்லை. அவற்றை நாடியே புறப்பட்டேன்."
"அப்படியா? எங்கள் வீட்டுக்கு வந்தால் வேண்டியதைத் தருகிறேன்."