பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை சிவபெருமானுக்குப் பண்டு பன்னிரு திருமுறைகள் வகுக்கப்பட்டுப் பன்னுாறு ஆண்டுகளாகச் செந்நெறிச் செல்வர்களால் ஓதி வழிபடப்பட்டு வருதல் போலத் திருமுருகப் பெருமானுக்கும் பன்னிரு திருமுறைகள் வகுத்தல் வேண்டும் என உளங் கொண்ட டாக்டர் தணிகைமணி வ. சு. செங்கல்வராய பிள்ளை, எம். ஏ., அவர்கள் முருகவேள் பன்னிரு திருமுறை என்னும் இத்தொகுப்பினைத் தக்க ஆராய்ச்சி உரையுடன் தொகுக்க முன் வந்து அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்ப் பாடல்களை ஏழு திருமுறைகளாக வகுத்து உரையெழுதி ஐந்து தொகுதிகளாக அமைத்து அச்சிட்டு வெளியிட்டனர். அடுத்து அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் கந்தரந்தாதி ஆகிய இருநூல்களையும் எட்டாந் திருமுறையாகவும், திருவகுப்பை ஒன்பதாந் திருமுறையாகவும், கந்தரனுபூதியைப் பத்தாந் திருமுறையாகவும் திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா, மற்றும் முருகனைப் பற்றிய பாடல்களைப் பதினொன்றாந் திருமுறையாகவும், தேனூர் வரகவி சொக்கலிங்கம் பிள்ளை அவர்கள் பாடிய சேய்த்தொண்டர் புராணம்' பன்னிரண்டாம் திருமுறையாகவும் தொகுக்க முருகவேள் பன்னிரு திருமுறை உருப்பெறலாயிற்று. இப் பன்னிரு திருமுறைகளின் மறு பதிப்புகளைக் கழகவழி வெளியிடக் கருதி ஏற்று 1965 ஆம் ஆண்டில் சில தொகுதிகளை வெளியிட்டோம். முதன் முறையாக முன்பு வெளியான ஆறு தொகுதிகளையும் ஒரு சேர வெளியிட வேண்டுமென்ற ஆவல் நிறைவேறும் வகையில் ஈண்டு நான்கு பாகங்களில் வெளியிட்டுள்ளோம். திருமுருக அன்பர்கள் இதனை ஏற்றுப் போற்றி முருகன் அருள் பெறுவார்களாக சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தார்.