பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோட்டைமதிற் சுவர்கடந்து படர்ந்த சோழர் குலக்கொடியை அரண்மனைக்குள் காவல் வைத்தான். 'ஈட்டியெங்கே எழுத்தாணி யெங்கே சோழர் இன்பத்துப் பாலெங்கே சுவடி யேந்தும் பாட்டுப்பிச் சைக்காரக் கவிஞன் எங்கே! பருவைர மெங்கே கூழாங்கல் எங்கே? தீட்டியகூர் வாள்மணந்தான் நடக்கும்; காதற் திருடர்களுக் கென்றுகுலோத் துங்கன் சொன்னான். கருக்கரிவாள் பிறைநிலவு வானத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது பேடையைப் பிரிந்த தமிழ்க்குயில் தனியே கூவுகிறது. சிரிக்கும் சிலையே! தேடியிங்கு வாராதே! தேடிநீ வந்தால் தேனே! என் உள்ளத்தில் கருக்கொண்ட காதற் கற்பனைகள் கலைந்துவிடும். கற்பனைகள் கலைந்தாலும் கவலையில்லை; உனைப்பெற்ற விற்புருவ வேற்கண் அன்னையென்ன சொல்வாளோ? ஆனாலும் நீயென்றன் ஆருயிரில் கலந்துவிட்டாய்! தென்றல் இளங்காற்றே தேடியிங்கு வாராதே! தேடிநீ வந்தால் திருவிளக்கே! என்னுடைய கண்கள் வளர்க்கும் கனவு கலைந்துவிடும். கனவுகலைந்தாலும் கவலையில்லை; உனைப்பெற்ற தினவுத்தோள் தந்தை சீறியென்ன சொல்வானோ? ஆனாலும் நீயென்றன் ஆருயிரில் கலந்துவிட்டாய்! பாட்டுக் குரல்கேட்டு ஆட்டமயில் ஓடிவந்தாள். முருகுசுந்தரம் கவிதைகள் 249