1945 இல் முல்லை முதல் இதழில் வெளிவந்த தொகுப் பாளர் உரை. முல்லை கூறுகிறது இது முல்லை"யின் முதல் முறுவல். தமிழ் மக்களின் புகழ் கொழிக்கும் பொங்கல் நாளில் வருகிறது. முல்லை' யின் மணம் தமிழின்பமே. தமிழின்பமே முல்லை'யின் குறிக்கோள். முல்லை'யில் சிறப்பாக நம் கவியரசர் அவர்களின் கவிதைகளும், அவர்களைப் பற்றிய கருத்துரைகளும் முகிழ்த்து மலர்ந்து மணம் தரும். தமிழ் நாட்டின் தனிப்பெருங் கவியரசர் பாரதிதாசன் அவர் களின் கருத்தில் அரும்பி, அறிஞர்களின் அருந்துணையால் முகிழ்த்து, என் செயலால் மலர்ந்தது இந்த முல்லை!" தமிழ்ப் பெருமக்கள் முயற்சிக்குத் துணைபுரிவார்களாக. முல்லை'யின் ஆதரவாளர்-அன்பர்கட்கு, வணக்கம்நன்றி. தமிழ் ஆக்கம் ஒன்றே, முல்லை'யின் நோக்கம். அரசியற் சூழ்ச்சி, சமயவாதம் இவற்றிற்கு இடம் இல்லை இயன்றவர்ை தமிழையே கையாளுவது, பொருட்செறிவும் கருத்து நயமும் இருப்பின் பிற சொற்களில் பகைமை இல்லை. எண்ணத்தில், கருத்தில், சொல்லில், செயலில் தமிழாட்சி நிலைபெறக் காணவேண்டும். கட்டுரைகள் தந்த அறிஞர்கட்கு எம் நன்றி. மிகக் குறுகிய கால அளவிற்குள் கொண்டுவரப் பெற்றது இந்த முல்லை. அடுத்த மலர் இதனினும் நறுமணத்தைத் தரும் என்பதைச் சொல்ல வேண்டுமா? இந்த மலர் உருப்பெற்று வெளிவரப் பெரிதும் துணையாயிருந்த இருபெரும் நண்பர்களான முருகு - சுப்பிரமணியம் - கண. இராமநாதன் இருவருக்கும் நன்றி! -முல்லை முத்தையா தொகுப்பாளர்