பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பா.

81


'உங்கமேலேயும், உங்க வீட்டுமேலேயும் இருக்கிற வெறுப்பாலேதான் சுவரே எடுக்கக் கிளம்பினார் இவர்' என்று அம்மிணி அம்மாவிடம் உள்ளதைச் சொல்ல முடியுமா? சொன்னால்தான் அது நன்றாகயிருக்குமா? உச்சியில் முழ உயர முள் வேலியுடன் சுவர்தான் எடுக்க முடிந்ததே ஒழிய அதற்கு மஞ்சள் கோபி கூட அடிக்க முடியவில்லை. தொட்டுக்கொள் துடைத்துக்கொள் என்று கடன் வாங்கிய பணத்தை வைத்துச் சுவரை எடுத்து முடித்தாயிற்று. அம்மிணி அம்மாவின் மூத்த பெண்கள் மாலா-பாலா- இருவரும் ஒரு நாள் கண்ணன் வீட்டில் இல்லாத போது சுகன்யாவிடம் வந்து பேசிக் கொண்டிருந்த போது, “அவசர அவசரமாகக் கட்டி, மேலே முள் கம்பியும் போட்டதாலே இந்தச் சுவர் அசிங்கமாத் தெரியுது அக்கா! மேலே வெள்ளையோ கோபியோ பூசாததாலே ரொம்ப விட்டுத் தெரியுது. இத்தனை அவசரமா இதைச் செய்திருக்கவே வேண்டாம்"- என்று குறைப்பட்டுக் கொண்டு போனார்கள்.

குழந்தை கலாவுக்குக்கூடச் சுவர்வந்தது பிடிக்கவில்லை. பக்கத்து வீட்டிலிருந்து சாக்லேட், பென்ஸில், பால்பாயிண்ட் பேனா என்று கை நீட்டி வாங்க முடியாதபடி சுவர் குறுக்கே நின்றது. வாசல் வழியாகப் பக்கத்து வீட்டுக்குள் போய், இதெல்லாம் வாங்கிக் கொள்ள அப்பா வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்துக் காத்திருக்க வேண்டியிருந்தது.

சுவரைப் பற்றி அம்மிணி அம்மாவும் அவளது பெண்களும் கூறிய விவரங்களைக் கணவனிடம் சுகன்யாவால் தெரிவிக்கக் கூட முடியவில்லை. தான் அவர்களோடு பேசிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தாலே கணவனுக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும் என்பதை அவள் நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாள்.