பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

முள்வேலிகள்

இப்படித் திரிசூலத்தின் மூன்று கோணங்களைப் போலக் கண்ணன் வீட்டு வாயிலிலிருந்து ஓவர்ஹெட் வயர்கள் போனதால் அவ்வப்போது கண்ணனின் முகப்புத்தோட்டத்து மாமரம், வேப்பமரம், பப்பாளி, தென்னை, கிறிஸ்துமஸ் மரம் எல்லாம் வெட்டுதலுக்கு ஆளாயின. அவன் வீட்டுக்கான கனெக்க்ஷன் வாயிலுக்கு நேராக ஓவர்ஹெட் லயனில் வந்ததால் அந்த ரூட்டில் மரங்களே இல்லை. ஆனால் இருபக்கத்து வீடுகளுக்குமாக அவன் வீட்டை நடுவாக வகிர்ந்து கொண்டு போன ஓவர்ஹெட் கனெக்க்ஷன்களால்---அவற்றுக்கு இடையூறு என்ற பெயரில் வந்து அவன் தண்ணீர் ஊற்றி வளர்த்த அருமை மரங்களை அடிக்கடி சிதைத்து வெட்டினார்கள் மின்வாரிய ஆட்கள்.

இது வழக்கமாக நடக்கிற சேதம்தான் என்றாலும் அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் கண்ணன் கண்முன்பே அவனது பசுமை சிதைக்கப்பட்டது. ஓலையை வெட்டுகிறேன் என்ற சாக்கில் மின்சார வாரியத்தின் ஆள் கைத்தவறுதலாக ஒரு குலை இளநீரையும் கீழே வெட்டித் தள்ளி விட்டான் அன்று.

இதைக் கண்டு கண்ணன் தெருவுக்கு வந்து கூப்பாடு போட்டான்: "விவஸ்தை இருந்தா அடுத்தவன் வீட்டு வழியாக கனெக்க்ஷன் வாங்கிக்கிட்டு உயிரை எடுக்கப்பிடாது. அவங்கவங்க வீட்டுக் கனெக்க்ஷன் அவங்கவங்க வீட்டு வழியா இருக்கணும், மானரோஷம் இல்லாத ஜன்மங்க பக்கத்து வீடுகளிலே குடியிருந்தா என்ன பண்ணமுடியும்?"

இந்தக் கூப்பாடு காதில் விழுந்து முதலில் பாகவதர்தான் வெளியே வந்தார். அப்புறம் சிறிது நேரத்தில் அம்மிணி அம்மாள் வெளியே வந்தாள். கண்ணன் இருவர் காதிலும் விழுகிறாற்போல மறுபடியும் இரைந்தான். "உங்களாலே என் வீட்டு மாமரமும் தென்னை மரமும் பாழாகுது. முதல்லே பணம் கட்டி அண்டர் கிரவுண்ட் கேபிள் கனெக்க்ஷன் வாங்கப் பாருங்க. இல்லாட்டிக் கம்பத்திலிருந்து நேரே