பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

முள்வேலிகள்

எல்லாம் தமிழாக்குவதாகத் தாரில் பெரிய பெரிய எழுத்துக்களை எழுதியது ஆகியவை பற்றி விவாதிக்கவே இந்த அவசரக் கூட்டம் கோரப்படுகிறது என்று கண்ணனுக்குப் புரிந்துவிட்டது. காலனி நலன் நாடுவோர் சங்கச் செயலாளர் பதவியில் நீடிப்பதா, ராஜிநாமாச் செய்து விட்டு ஒதுங்கிக் கொள்வதா என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தான் அவன். கரடு முரடான வேகத்தோடு சாதக பாதகங்களைப் பற்றிய முன் யோசனையே இன்றிப் புலவர் பண்ணியிருந்த சில வேலைகளைப் பார்க்கும்போது கண்ணனுக்கே அவர்மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

முதல் குறுக்குத் தெருவில் இருந்த பல் டாக்டர் 'கிங்சிங்சூ'வின் 'டென்டிஸ்ட்' 'டெண்டல் கிளினிக்’ என்ற ஆங்கில போர்டுகளில் தார் பூசி அழிக்கப்பட்டு, 'பல் செப்பனிடும் பட்டறை' 'பல் ஆய் மருத்துவர்-என அதன் பக்கத்திலேயே தாரில் தமிழாக்கம் போடப்பட்டிருந்தது.

தேவநாகரி எழுத்துக்களில் 'ஶ்ரீராம மந்த்ரம்' எனப் பாகவதர் வீட்டு முகப்பில் சலவைக் கல்லில் பதிக்கப் பெற்றிருந்த வீட்டுப் பெயர் தார் பூசி அழிக்கப்பட்டுச் சுவரில் 'இந்தி ஒழிக’ என்று அதனருகிலேயே பெரியதாக எழுதப் பட்டிருந்தது. .

'பிவேர் ஆஃப் டாக்ஸ்'-என்று அம்மிணி அம்மாள் வீட்டு முகப்பில் தொங்கிய ஆங்கில போர்டு அழிக்கப்பட்டுக் கொஞ்சம் குறும்பாகத் தமிழில் மாற்றி '(இந்த வீட்டில் உள்ள) பெண் நாய்கள் ஜாக்கிரதை'-என்று பூதாகரமான எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. பூஜைக்காக அங்கே போனபோது பாகவதர் படித்துச்சொல்லி அம்மிணி அம்மாள் குடும்புத்தாருக்கு அது தெரிய வந்த விவரத்தைக் கண்ணனே பார்த்துத் தெரிந்துகொண்டிருந்தான். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் இருந்த அம்மிணி அம்மாளின் வீட்டுப் பெயரான 'பொன் குன்னம்'-என்பது முற்றாகத் தார் பூசி அழிக்கப்பட்டிருந்தது.