பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158


இந்த விழாவைப் போன்று, சில கந்தூரி விழாக்களும் தமிழகத்து இந்து சகோதரர்களின் திருவிழாக்களின் சாயலில் நடைபெற்று வருகின்றன நாகூரில் சாகுல்ஹமீது ஆண்டகை அவர்கள் கந்தூரி, ஏறுபதியில் சுல்தான் சையது இபுராகீம் ஷஹீது (வலி) அவர்கள் கந்தூரி, மதுரையில் முகையதீன் ஆண்டவர்கள் கந்தூரி ஆகியவைகள் பெரிய கப்பல், தேர் போன்ற அலங்காரங்கள் (தாஜியா) ஆரவாரத்துடனும் வான வேடிக்கைகளுடனும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. பாமர மக்களின் ஈடுபாட்டைக் குறிக்கும் இந்த விழாக்கள், இஸ்லாமிய சமய உணர்வுகளையே அல்லது நெறிமுறைகளையோ, சுட்டிக் காட்டுவதில்லை. என்றாலும், இந்த விழாக்களில் இந்து சகோதரர்களும் ஆர்வத்துடனும், ஆழ்ந்த பற்றுடனும் பங்கு கொண்டு விழாக்களில் புனிதத்தை பெரிதுபடுத்துவது குறிப்பிடத்தக்கது. சென்னைப் பெருநகரில் உள்ள இந்துக்களில் ஒருபிரிவினர் இஸ்லா மியரது முகரம் நாட்களை “அல்லா பண்டிகை” என ஆரவாரத்துடன் கொண்டாடி வருவதும் இங்கு நினைவு கூரத்தக்கது.

இதனை விட இன்னும் விசேடமான செய்தி என்னவென்றால் தமிழகத்து திருக்கோயில் விழாக்களில் இஸ்லாமியர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை அமைத்து அனுஸ்டித்து வருவதாகும். உதாரணமாக, மதுரையில் ஆண்டுதோறும் நடை பெறும் சித்திரைப் பெருவிழாவை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. இந்த விழாவில் பிரதான நிகழ்ச்சி. அழகர்மலைக் கோவிலில் இருந்து அழகர் பெருமாள், குதிரை வாகனத்தில் மதுரை மாநகருக்கு ஆரோகணித்து வருவதாகும். தனது தங்கையான மதுரை இறைவி மீனாட்சியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக. ஆனால், மதுரையின் வட பகுதியை-வையை ஆற்றங்கரையை-அவர் அடைந்தவுடன், ஏற்கனவே, அவர் தங்கையின் திருமணம் நிறைவேறிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஏமாற்றத்தினால் அவர் மதுரை நகருக்குள் நுழையாமல் மதுரைக்கு கிழக்கே வையைக்கரையில் உள்ள வண்டியூருக்கு சென்றுவிடுகிறார். அங்கு தமது அன்புக் கிழத்தியான “துலுக்கச்சி நாச்சியார்” இல்லத்தில் தங்கிவிட்டு அடுத்த நாள், மீண்டும் அழகர்மலை திரும்புவதான நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெளர்ணமியில் அமைக்கப்பட்டு நடைபெறுகிறது.