பக்கம்:மூவரை வென்றான்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

13


“ஒகோ! அப்படியா? ஜமீன்தார் வீரமருதுத் தேவரே! நின்று நிதானித்துப் பேசும். வீரமல்லனை நீர் அவ்வளவு சுலபமாக ஏமாற்றிவிட முடியாது. கன்னிமாலையாற்றில் அணை போட்டுத் தண்ணீரை அடைத்து வைத்திருப்பதும் கொள்ளைத் தொழிலுக்குக் கூலிப்படை தயார் செய்து என் கிராமத்தின் மேல் ஏவி விடுவதும் உம்முடைய திருவிளையாடல்தான் என்பதை நான் அறிவேன்.”

“நீ மட்டும் பெரிய யோக்கியனோ? புதிதாகக் கிடைத்த இனாம் கிராமத்துக்குக் கண்மாய் வெட்டுகிறேன் பேர் வழியே என்று ஒரே பள்ளமாக வெட்டி ஏற்கெனவே இருக்கும் என் கண்மாய்களுக்குத் தண்ணீர் வரவிடாமல் பாழ் செய்வது உன் திருவிளையாடல்தானே?”

“வீரமருதுத் தேவரே! நீர் கூறுகிற குற்றத்தை வேண்டுமென்றே நான் செய்யவில்லை என்பதை நீர் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஏதோ கண்மாய் வெட்டினேன். அது ஆற்று மட்டத்தைவிடப் பள்ளமாக அமைந்து விட்டது. நீங்கள் ஒரு வார்த்தை கண்ணியமான முறையில் என்னிடம் கூறியிருந்தால் நானாகவே பள்ளத்தைத் துார்ப்புதற்கு ஏற்பாடு செய்திருப்பேன். அதை விட்டுவிட்டு நீங்கள் என்னிடமே ஆழம் பார்க்கத் தொடங்கிவிட்டீர்கள். நீரும் மறவர்; நானும் மறவன்தான்.”

“இந்தப் பயமுறுத்தல் எல்லாம் என்னிடம் பலிக்காது தம்பீ! என் ஜமீனுக்கு முன்னால் உன்னுடைய கிராம்ம் கடுகுக்குச் சமம். நீ என்னிடம் வாலாட்டினால் உனக்குத் தான் ஆபத்து”.

வீர்மல்லன் இதைக் கேட்டுக் கலகலவென்று வாய் விட்டுச் சிரித்தான்.

“உம்முடைய நத்தம்பட்டி ஜமீன் என்னுடைய இனாம் கிராமத்தைவிடப் பெரியதாக வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வீரமல்லனும் அவனுடைய இனாம் கிராமும் மனம் வைத்தால் உம்மை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட முடியும். ஜாக்கிரதை ஞாபகமிருக்கட்டும்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/15&oldid=505583" இலிருந்து மீள்விக்கப்பட்டது