48
உயிர்த்தெழுந்தார்
மூன்றாம் நாள் ஆண்டவரை அலங்கரிக்க விரும்பி
மகதலேனாள் பரிமளப் பொருளோடு வந்தாள்
கல்லறை வாயில் திறந்து கிடந்தது
அவர்உடல் இல்லை உடைமட்டும் கிடந்தது.
தேவனுடல் திருட்டுப் போயிற்றோ
பரிசேயப் பகைவர் எடுத்து மறைத்தனரோ
அலமந்தாள். அங்கும் இங்கும் தேடினாள்
தேவதூதன் ஒருவன் அவளுக்குத் தோன்றினான்
வருந்துகின்ற மாதே மகிழ்ந்திடுக நற்செய்தி
ஏசுபிரான் உயிர்த்தெழுந்தார் உணர்க
ஊருக்கு உரைத்திடுக உண்மை பிழைத்தது என்றான்
என் ஆண்டவரை நான் எப்போது காண்பேன்
எங்கே காண்பேன் என்று கேட்டபடி நடந்தாள்
ஒரு தோட்டக்காரன் அவளுக்கு எதிர்பட்டான்
நீ அவரை நினைத்தால் நெஞ்சிலே தெரிவார்
நேர்ப்பட்டால் உனக்கு எதிரே வருவார்
என்றதும் இது ஆண்டவரின்குரல் என்றாள்
இறைமகன் உயிர்த்தெழுந்த சேதிக்கு
ஊரே திரண்டு வந்தது அதனால்
கல்வாரி மலையும் ஒரு காவியம் ஆயிற்று
அன்னாசும் கைப்பாசும் அதிர்ச்சி கொண்டார்
ஆனாலும் நம்பவில்லை வதந்தி என்றார்