2. மொழியின் முன்னேற்றம்
பழமையும் பண்பாடும் பொருந்திய எந்த மொழியும் தனது மரபிலிருந்து விலகியபின் முன்னேறுவது என்பது இயலாத காரியம். மரபுடன் கைகோத்து நடவாத மொழி தனது கட்டுக் குலைந்து சீரழிவது ஒருதலை. பண்பட்ட இலக்கிய மொழிகளுங்கூட (Classical Languages) மரபைப் போற்றியே வாழ வேண்டும். காலத்திற்கு ஒவ்வாத சில வரையறைகளைக் காலத்திற்கேற்பச் சீர்திருத்திக் கொள்வது தவறன்று. அதுவும் மொழி வல்லுநர் துணையின்றிச் செய்யப்படுமானால் தவறு தான். புலனெறி வழக்கும், உலக வழக்கும், ஆகிய இருவகை வழக்குகளும் மொழியோடு நேரடியான தொடர்புடையவை. புலனெறிவழக்கு மொழியின் ஆக்கத்திற்குரிய நூல்களை இயற்றி மொழியை மரபு பிறழாமற் காக்கவேண்டும். உலக வழக்கு அன்னோர் நூல்களைப் பொன்னே போற் போற்றி மேற்கொண்டு வாழ வேண்டும். அங்ங்னம் ஒன்றுபட்டு வாழாது அறிவும் நாடும் பகை கொள்ளுமாயின் அவ்விரண்டின் பகை யினாலும் தடை செய்யப்படுவது மொழியின் முன்னேற்றமே யாகும். எனவே மொழியின் முன்னேற்றமும், அறிஞருலகமும் மக்களுலகமும் ஒன்றிற்கு ஒன்று முரண்பாடின்றி நேயமுறும் போதுதான் ஏற்பட முடியும் என்று அறிகிறோம்.
ஒரு பண்பட்ட மொழியின் அடிப்படைக் கருவிகள் இரண்டு. ஒன்று, எழுத்திலக்கண வரையறைகள் (Ortho graphy), மற்றொன்று, எழுத்திலக்கண வரையறைகளாலாகிய சொல்லிலக்கண வரையறைகள். இவ்விரு அடிப்படைக் கருவிகளும் தோன்றிய காலந்தொட்டுத் திண்மையாக அமையப் பெற்ற மொழிதான் இலக்கிய மொழியாகின்ற தகுதியைப் பெறமுடியும். பன்னெடுங்காலமாக வழங்கி, வழங்கிக் குறையாப் பயிற்சியும் நிறைவான வழக்கும் பெற்றுப் பெற்றுத் தான் மொழி முறையாகப் பண்படுகிறது. காய்ச்சக் காய்ச்சச்