9. மொழியும் மனத் தத்துவமும்
ஒரு மனிதனைத் தக்கான் அல்லது தகவிலன் என்று அறிந்துகொள்வது எப்படி? புறநடத்தைகளால் அறிந்து கொள்ள முடியுமா? அல்லது அக நடத்தைகளால் அறிந்து கொள்ள முடியுமா? எதன் மூலமாக ஒரு மனிதன் தக்கான் அல்லது தகவிலன் என்பதை உண்மையாக அறிந்துகொள்ள முடியும்? அக நடத்தைகள் என்பன மெய்யாகவே மனத்தில் எழும் எண்ணங்களையும் கோட்பாடுகளையும் குறிக்கும். புற நடத்தைகள் என்பன வெளிப் பகட்டுக்காகத் தான் நடந்து கொள்ளும் உண்மை எண்ணங்களுக்கு மாறுபட்ட செயல்களைக் குறிக்கும். எனவே, அக நடத்தைகளாலேதான் ஒரு மனிதன் உண்மையில் தக்கான் அல்லது தகவிலான் என்பதை அறிந்துகொள்ள முடியும் என்பது தெரிகிறது. மேனாடுகளில் இவற்றை மனோதத்துவம் என்ற பெயரின் கீழ் ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் பலர். மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றி விரிவாக ஆராய்ந்தவை பல; இனி ஆராய்ந்துகொண்டிருப்பவையும் பல. நமது பழந் தமிழ் நூல்கள் சில, ஒரு மனிதன் தக்கான் அல்லது தகவிலான் என்பதை அறிவது எதனால் என்னும் கேள்விக்கு விடை பகர்கின்றன. அக நடத்தைகள் என்பன வெளிப்படையாகக் கண்ணுக்குப் புலனாகாதன ஆகையால், அவைகளைக் கொண்டு ஒரு மனிதனை அறிந்துகொள்வது எப்படி முடியும்? எனக் கேட்கலாம். அந்த மனிதனுடைய அக நடத்தைகளே உருவெடுத்து அவனுக்கு ஒரு மகன் பிறக்கிறான் என்றால், அவனுடைய மகன் மூலமாக நாம் அந்த மனிதனது தக்க தன்மை, அல்லது தகவிலாத் தன்மையை அறிந்துகொள்ள முடியும். ஏனென்றால், அந்த மனிதன் தன் மகனைப் பெறுவதன் பொருட்டு மனையாளிடத்திலே அடையும்