பக்கம்:மொழியின் வழியே.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 79

கூத்தருக்கும், பாணருக்கும், விறலியர்க்கும், பொற் பூவும், பொற்றாமரையும் போல்வன பரிசில் நல்கிச் சிறப்புச் செய்யும் வழக்கத்தை அரசர்கள் மேற்கொண்டிருந்தன ரென்று தெரிகிறது. இவ்வாறு உயர்நிலையடைந்திருந்த காலத்துக்குப் பின்பு நெடுநாட்கள் கவனிப்பாரற்றுத் தாழ்ந்து தெருக்கூத்தாம் நிலைக்குப் போய்விட்ட நாடகக் கலையை மீண்டும் சில பெருமக்கள் தோன்றி உயர்நிலைக்குக் கொண்டு வர முயன்றனர், முயல்கின்றனர், முயல்வர்.

சம்பவக் கோவையும், உணர்ச்சிகரமான திருப்பங்களும் உள்ள கதை நாடகத்துக்குத் தேவை. பேச்சாலும், மெய்ப் பட்டாலும், இசையாலும், சுவையை உண்டாக்கிச் சிறப் படைவது நடிப்பு. நடிப்பில் பிறக்கும் சுவை இரு வகை நிலைகளை உடையது. ஒன்று சுவை தோன்றுமிடம்; மற்றொன்று நுகருமிடம். தொல்காப்பியர் இருவகை நிலத்தின் இயல்வது சுவையே” என்றார். நடிக்கும்போது தான் மேற்கொண்ட பாத்திரத்தின் உணர்ச்சிக்கு ஏற்ப நடிகன் உண்டாக்கிக் கொள்ளும் தத்ரூபமான போலித்தன்மைதான் மூலமான முதற் சுவை. அதைக் காணும் அவை மக்களிடம் உண்டாகும் அநுபவம் கிளைச் சுவை.

நடிகன் சுவையை உய்ப்பவன். இரசிகன் சுவையைக் கண்டு அநுபவிப்பவன். மிகப் பலராகிய அநுபவிப்பவர்களின் முன் தனி ஒருவன் தனி ஒரு சுவையைத் தத்ரூபமாக நடித்துக் காட்டுவது சிரமமான காரியமல்லவா? எல்லாராலும் இயலாத அத்தகைய சிரமமானகாரியத்தைச் செய்தால்தான் நடிகனுக்குப் பெருமை. ஒன்பது வகைச் சுவைகளுக்கும் வெளியீட்ாக ஏற்படும் பாவங்க்ளுக்குப் பழைய தமிழில் மெய்ப்பாடு என்று பெயர். உணர்ச்சிகள் படியும் கண்ணாடியாக மாறும் திறமை இருந்தால் நடிகன்வெற்றி பெற்று விடுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/81&oldid=621425" இலிருந்து மீள்விக்கப்பட்டது