பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உணவும் உடையும்

125


புலால் உண்ட மக்கள்

மொஹெஞ்சொ-தரோவில் உள்ள தெருக்களிலும் இல்லங்களிலிருந்து வெளிப்படும் கால்வாய்களிலும் வடிகால் களிலும் பிற இடங்களிலும் எலும்புத் துண்டுகள் பல சிதறிக் கிடந்தன. அவற்றைப் பார்வையிட்ட ஆராய்ச்சியாளர், ‘பொதுவாக இந்நகர மக்கள் புலால் உண்ணும் வழக்கத்தினர் என்று கருதுகின்றனர். இக்காலத்தில் சோற்றிலேயே இறைச்சியைக் கலந்து தயாரிக்கும் ‘புலவு’ (புலால்)[1] என்னும் ஒருவகை உணவு அக்காலத்திலும் சமைக்கப்பட்டு வந்தது. அம்மக்கள் சோற்றில் ஆடு மாடு, பன்றி, ஆமை, முதலை இவற்றின் இறைச்சித் துண்டங்களைக் கலந்து ‘புலவு’ செய்தனர்; பலவிகை மீன் இனங்களை உண்டு வந்தனர்; பலதிறப்பட்ட பறவைகளை உண்டு வந்தனர்; பிறநாடுகளிலிருந்து கலன்கள் மூலம் கொண்டுவரப் பட்ட உலர்ந்த மீன் இனங்களும்[2] இறைச்சி வகைகளும் உண்டனர்; இறைச்சித் துண்டங்களை உலர்த்திப் பக்குவப்படுத்திப் பெரிய தாழிகளில் அடைத்து அவ்வப்போது பயன்படுத்தி வந்தனர். ‘இத்தாழிகளில் வெள்ளாடு, எருது, செம்மறியாடு இவற்றின் எலும்புகள் கிடைத்துள்ளன. எனவே, இவ்விலங்குகளின் இறைச்சிகள் பதப்படுத்தி அடைத்து வைக்கப்பட்டன என்பது உண்மை. ஆனால், இப்பதப்படுத்தப்பட்ட இறைச்சித்துண்டங்கள் தினந்தோறும் பயன்படுத்தப்பட்டன என்றோ, விசேட காலங்களிற்றாம் பயன்படுத்தப்பட்டன என்றோ இப்போது திட்டமாகக் கூறுதல் இயலாது’.[3]

  1. பண்டைத் தமிழ் மக்களுட் சிலர் திருமண விருந்துகளிலும் ‘புலவு’ செய்து உண்டு வந்தனர். என்பது அகநானூற்று 186ஆம் செய்யுளால் அறிக.
  2. பண்டைத் தமிழர் ஏற்றுமதிப் பொருள்களில் உப்புப்படுத்திய மீனும் ஒன்றாகும் என்பது இங்கு அறியத்தக்கது.
  3. Dr.E.Mackay’s ‘The Indus Civilization’, p.185.