பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

மொஹெஞ்சொ - தரோ


பிற உணவுப் பொருள்கள்

அப்பண்டை மக்கள் காய்கறிகளையும் பால், வெண்ணெய், தயிர், மோர், நெய் முதலியவற்றையும் உணவுப்பொருள்களாகக் கொண்டிருந்தனர்; பலவகைப் பழங்களையும் உண்டு வந்தனர்.

சமையற் பொருள்கள்

அவர்கள் மாவரைத்துப் பலவகை உணவுப் பொருள்கள் செய்யக் கற்றிருந்தனர். வாணல் சட்டி, ஆட்டுக்கல், இட்டலி ஊற்றும் சட்டி இவை கிடைத்துள்ளமையே இம்முடிபுக்குரிய சான்றாகும். குழம்பு கூட்டுவதற்குரிய வேறு கறிகள் செய்வதற்குரிய மசாலைப் பொருள்களை இடித்து, அவற்றைப் பல அறை (மசாலை)ப் பெட்டியில் வைத்திருந்தனர். அங்குக் கிடைத்த அம்மி - குழவி, கல் உரல் இவற்றால் மசாலைப் பொருள்கள் அரைக்கப் பட்டன என்பதையும், இடிக்கப்பட்டன என்பதையும் நன்குணரலாம்.

உணவு கொண்ட முறை

அக்காலத்தவருள் பலர் பாய்கள்மீது அமர்ந்து உணவுப் பொருள்களை எதிரில் - வைத்துக்கொண்டு உண்டனர். பணக்காரர் நாற்காலிகளில் அமர்ந்து உண்டனர் என்று முத்திரைகளைக் கொண்டு கூறலாம். எனினும், இது ஒரோவழிக் கொண்டிருந்த வழக்கமாகக் கோடலே பொருந்துவதாகும். என்னை? இன்னும் பெரும்பாலான இந்தியர் வீடுகளில் நாற்காலி - மேஜைகளை உண்பதற்குப் பயன்படுத்தாமையின் என்க. மரம், சிப்பி, சங்கு, களிமண், செம்பு, வெண்கலம் இவற்றாலாய கரண்டிகள், கறிகளையும் குழம்பு, வகைகளையும் சோற்றையும் எடுக்கப் பயன்பட்டன. உண்ணற்குதவும் கரண்டிகளோ முட்களோ கிடைக்காமையின், அவர்கள் கைகளாலேயே உணவு பிசைந்து உண்டனர் என்பது தெரிகிறது.