புதைபொருள் ஆராய்ச்சி
15
நாகரிகத்தைத் தெற்றென விளக்கும் - இந்நகரச் சிறப்பை விரிந்த நூல்களிற் கண்டு மகிழ்க.[1]
பாரசீகம்
யூப்ரேடிஸ், டைக்ரிஸ் யாறுகள் பாயப்பெறும் நிலப் பகுதிக்குக் கிழக்கே ஆப்கானிஸ்தானம்வரை உள்ள நிலப்பரப்பே பாரசீகம் என்பது. இதன் பெரும் பகுதி பாலைவனம்; அதைக் கடந்தால் கண்ணுக்கினிய காட்சிகளை நல்கும் குன்றுகளும், மலைத் தொடர்களும் இருக்கின்றன. ஆங்காங்கு அழகிய நகரங்கள் உள்ளன. இங்குப் பழைய கால மக்கட்குரிய சின்னங்களும் எழுத்துக் குறிகளும் காணப்படுகின்றன. அவற்றை முதன் முதல் 1885 இல் ஆராய்ச்சி நடத்தியவர் கர்னல் ஸர் ஹென்றி இராலின்ஸன் என்பவர். இவர் பாரசீகரின் பண்டை எழுத்துக்களை அரிதின் முயன்று படித்தார்; பாரசீகரைப்பற்றிய பல செய்திகளை அறிந்து உலகிற்கு உணர்த்தினார்.[2]
இந்தியாவில் ஆராய்ச்சி
நம் நாட்டில் ஆராய்ச்சிக்குரிய இடங்கள் எவை? மெகஸ்தனிஸ், பாஹியன். ஹியூன் - ஸங், ப்ளைநீ, தாலமி போன்ற அயல்நாட்டார் இந்தியாவில் இருந்தபோதும் இந்தியாவிற்கு வந்த போதும் கண்டனவாகக் கூறப்பட்ட பண்டை நகரங்கள் இன்று மண்ணுள் மறைந்தும் உருமாறியும் அழிந்து உள்ளன. புத்தர் காலத்தில் சிறப்புற்று விளங்கிய பண்டை நகரங்கள் இன்று எங்கே இருக்கின்றன? தமிழ் அரசர் ஆண்ட தலைநகரங்கள் எங்கே? இவ்விடங்களில் ஆராய்ச்சி நடத்த அரசியலார் தனிக்குழு ஒன்றை அமைத்தனர்.அக்குழு இந்தியப் புதைபொருள் ஆராய்ச்சிக்குழு[3]