சிந்து வெளியிற் புதையுண்ட நகரங்கள்
25
இம்மாநகரம் ஹரப்பாவைப் போல அழிவுறவில்லை. நகர அமைப்பு, தெருக்களின் அமைப்பு இல்லங்களின் அமைப்பு இவை கண்டு இன்புறத் தக்கவை. வரிசை வரிசையாகக் கட்டப்பட்ட இல்லங்கள், மாடமாளிகைகள், மண்டபங்கள், நீராடும் குளம், கழிதீர்ப்பாதை, அஃது அமைக்கப்பட்டுள்ள உயரிய முறை. இன்ன பிறவும் கண்ணைக் கவர்வனவாகும். ஒவியங்களும் சித்திரக் குறியோடுகூடிய எழுத்துக்களும் கொண்ட கணக்கற்ற முத்திரைகள் அறிஞரை மெய்மறக்கச் செய்தன. பல நிறங்கொண்ட பலவடிவமைந்த மட் பாண்டங்கள், பொம்மைகள், விளையாட்டுக் கருவிகள், பண்பட்ட மண்ணாலும் சுண்ணாம்புக் கல்லாலும் அமைந்த பலவகைப்பொருள்கள், சங்கு-சிப்பி-பண்பட்ட மண். உயர்ந்த கற்கள் இவற்றாலாய அணி வகைகள் முதலியன உலக ஆராய்ச்சியாளர் தம் கவனத்தைத் தம்பால் ஈர்த்தன. இப் பொருள்களிற் பல, நாம் முற்பகுதியிற் கூறிய அசிரியா, பாபிலோனியா, மெசொபொட்டோமியா, ஏலம், பாரசீகம் முதலிய நாடுகளிற் கிடைத்த பொருள்களைப் பெரிதும் ஒத்திருத்தலைக் கண்ட ஆராய்ச்சி அறிஞர் திடுக்கிட்டனர். இவ்வரிய பொருள்களைப் பயன்படுத்திய மக்களது காலம் ஏறக் குறைய கி.மு.3250-கி.மு.2750 ஆக இருக்கலாம் என மதிப்பிட்டனர். இம்மாநகரம் பற்றிய செய்திகளை இத்துடன் நிறுத்தி, இச்சிந்து வெளியிலேயே புதையுண்டு கிடக்கும் பிற நகரங்களைப் பற்றிக் கவனிப்போம்.
சான்ஹு-தரோ
அறிஞர் என்ஜீ.மஜூம்தார், சிந்து ஆற்றின் கிழக்குப்புறத்தில் ஒரு புதிய இடத்தைக் கண்டுபிடித்துள்ளார். அப்புதிய இடத்தில் மூன்று மண்மேடுகள் இருக்கின்றன. அந்த இடம் 30000 செ. மீ. நீளமும் 2100 செ.மீ. அகலமும் உடையது, மண்மேடுகள் மூன்றும் 300, 510, 570 செ.மீ. உயரம் இருந்தன. அந்த இடம் ஒரு காலத்தில் ‘பெரியதொரு நகரமாக இருந்திருத்தல் கூடும்’ என்பது