36
மௌனப் பிள்ளையார்
'பாத தூளி பட்டு' என்று சொல்லுவதால் அநேகமாய்ப் பாத தூளியாய்த்தானிருக்கவேண்டும். பாதரட்சையின் தூளி யாக இருக்க நியாயமில்லை.
எனவே, எங்காவது தப்பித் தவறி என்னுடைய பாத தூளி ஏதாவது ஒரு கல்லின்மேல் பட்டு, அந்தக் கல் உடனே ஸ்திரி ரூபம் பெற்று...ஐயோ! அப்படிப்பட்ட ஆபத்து நமக்கு நேரிடக் கூடாது என்று தோன்றியதால் பாகவதர் காலட்சேபம் கேட்ட மறுதினமே பாதரட்சையை வாங்கிவிட்டேன்.
அன்று முதல் நான் வெளிக் கிளம்புவதா யிருந்தால் பாதரட்சையின்றிப் புறப்படுவதே கிடையாது.
என் மனைவி நேற்றைய முன் தினம் என்னிடம் ஒரு சந்தேக நிவர்த்தி செய்து கொண்டாள்.
"ஆமாம்; நீங்கள் செருப்பு வாங்கி வருஷம் எட்டாகிறது. ஆனால் அது அப்படியே புத்தம் புதிசாக இருக்கே, ஏன் அப்படி?" என்று கேட்டாள்.
✽
எட்டு வருஷ காலத்திற்குள் நான் எத்தனை டீ பார்ட்டிகள், எத்தனை கலியாணங்கள், எத்தனை பாட்டுக் கச்சேரிகள் சென்றிருக்கிறேன் என்பது அவளுக்குத் தெரியாது.
"ஆமாம்; கலியாணத்திற்கும் கச்சேரிக்கும் போனால் செருப்பு புதிசாயிருக்குமா என்ன?" என்று கேட்டாள்.
ஒவ்வொரு கச்சேரிகளிலும், ஒவ்வொரு கலியாணத்திலும் நான் என்னுடைய செருப்பை மறந்து வைத்துவிட்டு வேறு செருப்பு வாங்கிக்கொண்டு வருவதை அவளுக்கு ஸ்பஷ்டமாகச் சொன்ன பிறகுதான் தெரிந்தது. குடை விஷயமும் அப்படியே என்பதை நேயர்களுக்கு ரகசியமாகச் சொல்லி வைக்கிறேன்.
எத்தனையோ நண்பர்கள் செருப்பு குடை முதலியவைகளை வாங்கிய மறுநாளே போகிற இடத்தில் மறந்து வைத்துவிட்டு வருவதும் எனக்குத் தெரியும். அவர்களெல்லாம் என் கட்சியைச் சேர்ந்தவர்கள். இருக்கட்டும்; ஆரம்பித்த கதைக்கு வருவோம்.