பக்கம்:ரமண மகரிஷி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

67



நெல்லையப்பர் சொல்லியதைக் கேட்ட ரமணரின் அண்ணன் நாகசாமி, டிசம்பர் மாதம் வரும் அரசு விடுமுறை நாட்களில் தனது அன்னையுடன் திருவண்ணாமலை வந்தார்.

அந்த நேரத்தில் ரமணரிஷி, குன்றக்குடி மடமான குருமூர்த்தத்தில் தங்கியிருக்கவில்லை. திருவண்ணாமலையிலுள்ள அருணாசல மலையின் ஒரு குன்றுக் குகையிலே தங்கியிருந்தார். பெற்றதாயும், உடன் பிறந்த சகோதரனும் அங்கே சென்று ரமணரைப் பார்த்துக் கண்ணீர் விட்டார்கள். பத்து மாதம் சுமந்தவள் அல்லவா? அவளுக்குத்தானே தெரியும் அவள் அனுபவித்த துன்பங்கள்? அதனால் அழகம்மை பதறி, கதறி சிந்தினார் கண்ணீர்.

தாய் துடித்தாள்! அது அவளின் முன்னூறு நாட்களின் பாசம்! ஆனால், ஒரே இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்பு நாகசாமி ஊமையாகவே நின்றார்! ஆனால், சுவாமிகளைத் தன்னுடன் வீட்டுக்கு வருமாறு தாயார் அழைத்தாள்; பெற்ற பிள்ளையை பேசினாள்; இதற்கா உனை ஈன்றேன் என்று தன்னையே அவள் நொந்தாள்! இவற்றையெல்லாம் ரமணர் சிலை போல நின்று பார்த்துக் கொண்டே இருந்தார்.

இதைவிட வேறு என்ன செய்ய இயலும் அவளால்? அருணாசலத்தைவிட அதிக அருமையுடைய அன்பை வேண்டுமானால் அவளால் வழங்க முடியும்! அதனால்தான் ஊமைபோல நின்று தாயன்புக்கு உள்ளத்தை அடகு வைத்தார்.

அன்னையார் அழுதாள்! இதை அருகிருந்த ஒருவர் பார்த்து, இப்படி அழுகிறாரே உமது அன்னையார் ஏதாவது ஆறுதல் கூறி அனுப்புங்கள் என்றார். ஒரே ஓர் அன்பான வார்த்தையைச் சொல்லுங்கள். அந்தச் சொற்களே பெற்ற தாயின் குடியிருந்த கோயிலுக்கு ஆறுதலான தேவாரமாக இருக்கும் சுவாமி என்று ரமணரிடம் கெஞ்சினார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/69&oldid=1281072" இலிருந்து மீள்விக்கப்பட்டது