பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

ரோஜா இதழ்கள்

"அப்படித்தானிருக்கும், எதுவும் இதுகள் சொல்வதெல்லாம் நம்பிவிடக் கூடாது....”

“அதான் நல்ல கவுரவமான குடும்பங்களில் வீட்டோடு குழந்தை பார்த்துக் கொள்ள, வயதானவருக்குப் பணி செய்ய, வீட்டுப் பணிகளைச் சற்றே மேற்பார்வை பார்க்க... என்ற மாதிரியில் கெளரவமான ஒரு வேலை கிடைக்காதான்னு தான் மதுரம் கூட்டிண்டு வந்திருக்காப்பல இருக்கு...”

“அந்த மாதிரி வேலைக்கெல்லாம் இவ தோதுப்படாது” என்று அறுதியிடுகிறாள் நாமக்காரி.

வடக்கத்திக்காரி மென்னகை செய்து கண் சிமிட்டுகிறாள். பிறகு எல்லோருமே சிரிக்கின்றனர்.

“சரி, மன்னி, அநுசுயா வருவா சாயங்காலமா. ஃபாரம் கொண்டு வரச் சொல்றேன். இங்கே இருக்கட்டும் அதுவரை” என்று முடிக்கிறாள் லோகா.

லோகா உண்டு முடித்து, வெற்றிலை போட்டுக் கொள்கிறாள். பிறகு எல்லோருமாக வெளியே செல்கின்றனர். சேதுவுக்குப் பத்தியச் சாப்பாடு. அவன் தனியாக வந்து உட்கார்ந்து தயிர் கலந்த சோற்றையும் பொரித்த குழம்பையும் உண்டு மாடிக்குப் போகிறான். கோகிலாவின் கணவன் நாய்க்குப் பின்பக்கம் சோறு பொங்கி இறைச்சியுடன் போடுவதை மேற்பார்வை பார்க்க மீண்டும் இறங்கி வருகிறான். மைத்ரேயிக்கு செவ்வையாய்க் கவனிக்காமல் புழுத்துப்போன சாமான்களைப் பார்த்துச் சீராக்கும் வேலை சரியாக இருக்கிறது. பைபையாய் அரிசி, வண்டு ஓடும் சாம்பார் பொடி, கரப்பான் பூச்சி செத்துக் கிடக்கும் எண்ணெய்....

மதுரம், ஒவ்வொன்றாய் எடுத்து வைத்துவிட்டு, பர்ண சாலைக்குச் சாப்பாடு கொண்டு செல்கிறாள்.

சற்றைக்கெல்லாம் நெற்றியில் பச்சைக் குத்தும், வெள்ளைச் சேலையுமாக ஒரு பெண் வருகிறாள். இருபத்தைந்து வயசிருக்கும்.

“வா வா, அநுசுயாவா?” என்று மதுரம் சிரித்து வரவேற்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/100&oldid=1101954" இலிருந்து மீள்விக்கப்பட்டது