பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

31

லட்சுமி தலையை ஆட்டிவிட்டுக் கைப் பொட்டலத்துடன் போகிறாள். வீட்டுக்குச் சென்று அந்தக்கா குடுத்திச்சி என்று சொல்லித் தின்பாள்.

இரவு பரவும்போது விளக்கேற்றத் தோன்றவில்லை.

வாய் கசந்து வழிவது போலவும், அடிவயிற்றில் குமட்டு வது போலவும் பிரமை தோன்றுகிறது.

முடிவில்லாத இருள் குகைபோல் திகில்.

பாயை விரித்துக் கொண்டு படுக்கிறாள். கொசுக்கள் பாடுகின்றன. அண்மையில் கார் வரும் ஒலி கேட்கிறது.

சாலையிலிருந்து உள்ளே தள்ளியுள்ள அந்த வீட்டுப் பக்கம் காரா வருகிறது? கனவா? கதவைப் படாலென்று சாத்தும் ஓசை. கூசும் விளக்கொளி சுவரில் படிவதுபோல் பிரமை.

கதவைத் தட்டுகிறார்கள்.

யார்? ஒருவேளை அத்திம்பேர் காரில் வக்கீல் யாரயேனும் கூட்டிக்கொண்டு வந்திருப்பாரோ? அல்லது மாமாவோ ?

“மைத்தி ! மைத்தி!...”

அவன் குரல்தான். ஆவல்கள் பாம்பு வாணங்கள்போல் எழும்புகின்றன. சற்றுமுன் இருட்குகையில் செய்து கொண்ட தீர்மானங்களெல்லாம் அந்தக் குரலில் கரைந்து போகக் கதவைத் திறக்கிறாள்.

“விளக்கேத்தலே?”

“இதோ!”

அரிக்கேன் விளக்கு. அவன் இரவல் வாங்கி வந்தது தான். ஏற்றி வைக்கிறாள். அது மஞ்சளாக அழுது வடிஞ்சாலும், பருமனாக, குட்டையாக, பட்டைக் கடியாரச் சங்கிலி மோதிரங்கள், சில்க் சட்டை சென்ட் நெடியுடன் ஒருவர் நடையில் நிற்பதைக் காட்டிக் கொடுக்கிறது.

“கிளம்பு மைத்தி, இப்ப நீ வீட்டைக் காலி செய்யனும், நாம் இங்கேருந்து போறோம்” என்று அவன் பரபரக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/33&oldid=1099709" இலிருந்து மீள்விக்கப்பட்டது