பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

ரோஜா இதழ்கள்

“கோயிலில் கல் சாமிக்கு மனிதனைப் போல் சோறு போடுகிறார்கள்; பள்ளியறைச் சிங்காரம் செய்கிறார்கள். வைப்பாட்டி வீட்டுக்குக்கூடக் கூட்டிப் போகிறார்கள். ஏன் கக்கூசுகள் கட்டி வைக்கவில்லை?” என்று ஒரு பேச்சாளர் கேட்க பலமாகக் கூட்டம் கை தட்டியதும் அவளுக்கு இன்னும் நினைவிருக்கிறது.

வைப்பாட்டி வீட்டுக்குக் கூட்டிப் போவதென்றால் என்ன என்று புரியாமலும், வேறு யாரையேனும் கேட்டுத் தெரிந்துகொள்ள அஞ்சியும் குழம்பி இருக்கிறாள். ஒருநாள் அந்தக் கூட்டத்தில் யாரோ பன்றியைத் துரத்திவிட்டுச் சாணி உருண்டைகளையும் வீசினார்கள். அவள் அதில் காலை வைத்து விழுந்தும் எழுந்தும் குழந்தையுடன் அலங்கோலமாக மீண்டு வந்தாள்.

மாமா, கொடிக்கம்பை எடுத்து அவளை அடித்தார். “ஏண்டி, அம்மை அப்பனைத்தான் துடைச்சிண்டு வந்தேன்னா, புத்தி கூடவா கழுதை மேய்க்கப் போச்சு? பிராமணனைப் போட்டுத் திட்டறான், கோயில்ல சாமி இல்லேங்கறான், அசத்து அங்கே என்னடி வேலை உனக்கு?”

சுமதியக்காவின் கணவன் கம்யூனல் ஜி.ஒ. என்ற ஒன்றைப் பற்றிச் சமயம் வாய்க்கும் போதெல்லாம் பேசு வான். “பூணூல் இல்லாதவனுக்குத்தான் காலம் இது” என்று முத்தாய்ப்பு வைப்பான். அந்தக் கட்சியில் பொறுப்பாக அங்கம் வகிக்கும் ஒருவனோடு அவள் இணைந்து வந்திருப்பது இப்போது கட்டெறும்புக் கடியுண்டாற்போன்று உணர்வில் உறைக்கிறது.

“நான் சொல்றேன் கேள் தம்பி, தங்கச்சியை நம்ம வீட்ல கொஞ்ச நாளைக்கு விட்டிடலாம். பிரசார வேலைக்குக் குந்தகமில்லாம இருக்கும். வீட்டிலதான் பார்த்துக்க ஆளு இருக்கு. இப்ப நீ கூட்டிட்டுப் போயிக் குடும்பம் வைக்கிறது நம்ம வேலைக்கு ஒத்து வராது.”

அவள், ரசம் சாதம் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் கண்ணபிரான் பேசுவது கேட்டுச் சட்டென்று நிமிர்ந்து பார்க்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/36&oldid=1099719" இலிருந்து மீள்விக்கப்பட்டது