பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

35

“என்ன, மைத்தி? அண்ணாச்சி சொல்றாப்பல...”

“என்னங்க?” என்று ஒன்றும் புரியாதவளைப்போல் கேட்கிறாள் மைத்ரேயி.

“இத பாரம்மா, தம்பி கட்சிப் பிரசார விசயமா சுற்றுப் பிரயாணம் போகவேண்டியிருக்கு. நாளைக்கு நம்ம வீட்ல தான் கூட்டிட்டுப்போயி விடப்போறோம். உனக்கு எல்லாம் வசதியா இருக்கும். நம்ம மனுஷாளுங்க இருக்கிறாங்க. நீ வித்தியாசமா நினைக்க வேணாம். அப்பப்ப தம்பி பேசிக் களைச்சு, வருவான். டானிக் வாங்கிக்கிட!” என்று ஒரு கண் சிமிட்டலுடன் பேசி நிறுத்தும் கண்ணபிரானை அவளுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை.

ஆழந்தெரியாத தெப்பக் குளப்படிகளில் இறங்குகிறாள். முதற்படியில் காலை வைத்துவிட்டாள். இது அடுத்தபடி, எங்கேனும் வழுக்கிக்கொண்டு போய்விடுமோ?

வயிறு நிறைய உண்டபின் மலைவாழைப் பழங்களும் பீடாவுமாகக் காருக்குள் அவர்கள் வருகின்றனர். உட்கார்ந்தபடியே அவள் உறங்கிப் போகிறாள்.

பளிச்சென்று புலனாகாத பாதையைப் பற்றி கவலையும் பசியும் மறந்த உறக்கம்.

அவள் கண்விழிக்கும்போது நன்றாக விடிந்திருக்கிறது. வீடுகள்தோறும் தென்னை மரங்களும், பூஞ்செடிகளும் குலுங்கும் தெருவினுரடே வண்டி செல்கிறது. பெரிய சாலை, வயல்கள், தென்னை, மா மரங்களின் பசுமை, அதனிடையே கோபி நிறப் பூச்சுடன் நிமிர்ந்து நிற்கும் ஒரு வீட்டுக்குச் செல்லும் பாதையில் வண்டி செல்கிறது.

வாயிலில் குண்டு குண்டாகத் காய்த்துத் தொங்கும் குட்டை மாமரம் மிக அழகாக இருக்கிறது. கார் வரும் ஓசை கேட்டு ஒரு அல்சேஷன் நாய் ஓடிவந்து குரைக்கிறது. பணியாளன் ஒருவன் வந்து கதவைத் திறக்கிறான்.

கதவைத் திறந்துகொண்டு முதலில் கண்ணபிரான் இறங்குகிறார். பிறகு தனராஜூம் அவளும் இறங்குகின்றனர்.