பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

ரோஜா இதழ்கள்

“உன் பேரு எனக்கு வாயில வரதில்ல, ராணின்னு கூப்பிடுகிறேன். ராணி, குளிச்சிட்டு நல்லா டிரஸ் பண்ணிக்கச் சொல்லுன்னுது தம்பி. இன்னிக்கு, இங்கே உங்களுக்கு விருந்து...”

புத்தம் புதிய பட்டுச்சேலை, கத்திரிப்பூ வண்ணத்தில் ஒரு பக்கம் சரிகைப்பூ வேலை செய்த கரை. வெல்வெட் சோளியை அந்த அம்மை பிரித்துக் காட்டுகிறாள். “புதிசு. வடிவுதான் தச்சுக்கிட்டது. பிறகு அளவு சரியில்லைன்னு போட்டுட்டுப் போயிட்டுது. உனக்குச் சரியாயிருக்கும்...”

எடுப்பாகக் கொங்கைகள் தெரிய வெட்டித் தைத்திருக்கிறார்கள். சேலையும் இரவிக்கையும் ஆசைப்பட்டு மாயும் உள்ளத்தைச் சுண்டி இழுத்தாலும் அவளால் கைநீட்டி வாங்க முடியவில்லை. நூறு ரூபாய்க்கு மேல் பெறும் சேலையும் சோளியும், அவளுக்கு எதற்காக எடுத்துக் கொடுக்கிறார்கள்?

அவள் தயங்கும் போது ஆவலில் துள்ளும் உள்ளம் ஓர் புறம் போலிக் கவுரம் பாராட்டிக் கொண்டு நிராகரித்து விடாதே என்று கையை நீட்டச் சொல்கிறது.

தன் காதலன் சம்பாதித்து ஒரு போலிப் பட்டுத் துணி வாங்கிக் கொடுத்திருந்தால்கூட இதைவிடப் பெருமையாக இருக்கும். அந்த மாதிரி வெட்டுச் சோளி அணிந்துகொள்ள வேண்டும் என்று அவளுக்கு ஆசை உண்டு. ஆனால் அக்கா எவ்வளவுக்கு அவளை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தாள்! இறுகப் பிடித்த ரவிக்கை போட்டுக்கொள்ளக்கூடாது. சேலைத் தலைப்பை நீளமாக விட்டுப் போர்த்துக் கொள்ள வேண்டும்.

சிறுசிறு ஆசைகளுக்கெல்லாம் அணை போட்டுத் தடுத்ததினால் தான் அவள் இப்படி ஒரேயடியாகக் கட்டுப் பாட்டை மீறியிருக்கிறாளோ?

சேலையும் சோளியும் அவளைச் சீண்டிச் சீண்டி சிரிக்கின்றன. குளித்துவிட்டு அவற்றை அணிந்துகொள்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/44&oldid=1099661" இலிருந்து மீள்விக்கப்பட்டது