50
ரோஜா இதழ்கள்
சரேலென்ற இறக்கம்
“மாடியில் என்ன இருக்குண்ணு பாக்கப்போற?”
மின்னல்போல் இங்கிதமாக ஒருசிரிப்பு உடனே தோன்றி மறைகிறது. இது வாழ்க்கையில் மலர்ந்திருக்கும் உண்மையோ மருமக் கதைகளில் வரும் காட்சியோ என்று திகைக்கிறாள் மைத்ரேயி.
“ஒரு கூடமும் ரூம்பும்தான். பீடித்துண்டு, காலிப்புட்டி, சீட்டுக்கட்டு, காயிதக்குப்பை எல்லாம் இருக்கும், முனிசாமி போயிச் சுத்தம் பண்ணுவான். நீ இங்கே வா!”
கட்டளைக்குரல் ஓங்கி நிற்கிறது. “மணி ஏழுரையாவுது, பொரியல் கூட்டு எல்லாம் அப்படியே இருக்குது. நேரம்போனா வாசனை வந்திடும். வா...” என்று கூப்பிடுகிறாள்.
“அவங்கல்லாம் வரட்டுமே.”
“அவுங்கல்லாம் இப்ப எங்கே வரப்போறாங்க? நீ வான்னா வா!”
“எனக்குச் சாப்பாடு வேணாம், பசி எடுக்கல.”
அம்மணி அம்மாள் அவளை உறுத்துப் பார்க்கிறாள்.
“ஏன் பசி எடுக்கல? மத்தியானமே நீ சரியாச் சோறு தின்னல. எனக்குத் தெரியும் பசி எல்லாம் எடுக்கும்” சரேலென்று மேற்படி ஏறி அதட்டும் அதட்டலுக்கு அஞ்சிய வளாக அவள் பின்னே செல்கிறாள்.
இடுப்பில் சாவிக்கொத்து குலுங்குகிறது. போலிப்பட்டு விளக்கொளியில் மின்னுகிறது. வாட்டசாட்டமான பிறரை அடக்கியாளக்கூடிய உருவம்; பேச்சு; பார்வை.
பின்கட்டுக்குச் சென்று சமையலறையில் கீழே ஒரு இலையைப் போடுகிறாள். பிறகு தவலைச் சோற்றை ஒரு அலுமினியக்கிண்ணத்தில் போட்டு, மிஞ்சிய காய்குழம்பு எல்லாவற்றையும் போட்டுக் கலக்குகிறாள். ஒரு மொத்தை, உருண்டையாக இவள் இலையில் வைக்கிறாள்.
“மொடாவிலேந்து நீரெடுத்து வச்சிட்டு உக்காருவே. விக்கலெடுக்கப் போவுது!”