பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

ரோஜா இதழ்கள்


“ரசம் வேணாம். எனக்கு மோரு போதும்.”

“ஓ மோரா? எனக்கு நெனப்பே இல்ல. எந்திரிச்சி, அங்கே எலபோட்டு மூடியிருக்கிறானே, அந்தப் பானையில தயிரு இருக்கும் பாரு. அலுமினியக் குவளையில மோந்து விட்டுவா...’

“மோரு எனக்கு வேணாம்...”

“ஏன் வாணாம்? தொட்டாச்சுருங்கியா இருப்பே போலிருக்குதே! டே, மாணிக்கம், மாணிக்கம்” என்று குரல் கொடுக்கிறாள். அந்த மீசைக்காரனின் எதிரொலியே கேட்கவில்லை-- இதற்குள் மைத்ரேயியே எழுந்து, ஒரு கையால் பானையில் மூடியிருந்த இலையைத் தள்ளிவிட்டு அடியில் இருக்கும் தயிரை வழித்தெடுக்கிறாள். கொசுக்கள் மொய்க்கின்றன. ஒரே புளிப்பு. நீரை ஊற்றிப் பிசைந்து விழுங்குகிறாள். அம்மணியம்மா ரசம் கலந்து நாலைந்து கவளம் உண்கிறாள். சாப்பாடு முடிகிறது.

மைத்ரேயி கையில் இலையைச் சுருட்டிக் கொள்கிறாள். பின் தோட்டத்துக் குழாயடியில்கைகழுவிக்கொள்கையில் முண்டாசுக் கட்டுடன் மாணிக்கம் அங்கே வருகிறான்.

“எங்கே போயிட்டே? போயி, சோறு குளம்பு எல்லாம் இருக்கு எல்லாம் உண்ணிட்டு, அடுப்பாங்கரையைச் சுத்தமா வையி. அங்கேயே பீடியைக் குடிச்சிட்டுப் போட்டு வைக்காதே. ரூம்பைக் கழுவிவிட்டு காலை நேரத்துக்குச் சுத்தமா வையி....!”

“சரிம்மா!” என்று அவன் உள்ளே செல்கிறான்.

குழாயடியில் வாய்கொப்புளித்துக் கால் கழுவிச் சுத்தம் செய்துகொண்டு உள்ளேவந்து விசிறியடியில் உட்காருகிறாள் அம்மணியம்மாள். வெற்றிலை பாக்குத்தட்டை மைத்ரேயியிடம் நகர்த்தி உடனே, “ஒ, நீ தான் வெத்திலே போட மாட்டியே?” என்று பின்னுக்கு இழுத்துக் கொள்கிறாள்.

வெற்றிலையில் சுண்ணாம்பைத் தடவித் தடவி வாயில் போட்டு மெல்லுகிறாள். பெரிய தாடைகள் அசைகின்றன.

“என்ன பாக்கிறே? நான் பொகையிலே போடுறது வழக்கமில்ல...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/54&oldid=1101853" இலிருந்து மீள்விக்கப்பட்டது