பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

63

“எழுந்திருங்கோ வீட்டுக்கு உடைமைக்காரி வந்துட்டா. காப்பியக் கலந்து இப்பிடி ரெண்டு டம்ளர் வைடா சீனு!” என்றுமதுரம் அறிவிக்கிறாள்.

“ஓ, பேஷா! அவாளுக்கில்லாததா?” என்ற சீனு நிமிர்ந்து பார்த்துவிட்டு, பாலைக் கிளறி ஐஸ் டம்ளரில் ஊற்றி, டிகாஷனை விட்டுக் கலந்து சர்க்கரையைப் போட்டு ஓட்டல் பாணியில் ஆற்றி வைக்கிறான்.

அடுக்கடுக்காய் அவள் சொப்பனம் காண்கிறாளா? இவர்கள் யார்? இந்தக் குடும்பத்துக்கு என்ன ஒட்டு?

இந்த மனிதன் எங்கோ ஓட்டல் வைத்து ஓட்டாண்டியாகப் போனபின் குடும்பமும் குட்டிகளுமாக இங்கே பிழைக்க வழி தேடி வந்திருப்பதாகத்தான் மைத்ரேயி அறிந்திருக்கிறாள்.

குடும்பம் நிலைக்கக்கூடிய வேர்களுக்குப் பொருளாதார பசை இல்லாமல், அவ்வப்போது மதுரம் பின்கட்டில் அக்காவைத் தேடி வந்ததுண்டு. சூணா வயிற்றுக் குழந்தைக்கு அக்கா தினமும் அரை டம்ளர் பால் கொடுப்பாள். “அதை இங்கேயே குடுத்துடேன்? ஏன் ஆத்துக்குத் தூக்கிண்டு போறே?” என்று அதட்டுவாள்.

மடியாக, மாவிடிக்கவும், தோசைக்கு அரைக்கவும் வரும் போதெல்லாம் அவளைத் தொடர்ந்து அந்தப் பையன்களும் வந்து தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

“உங்க மனசுக்கு இப்படிக் கடவுள் வைக்கலாமா? வேண்டாம் வேண்டாம்ங்கறவாளுக்கெல்லாம் சோதனையாக் குடுக்கறார்... நான் முகஸ்துதிக்காகச் சொல்லல. உங்களைப்போல உலகத்திலே யாரிருக்கா? என்னை எல்லாரும் வாயிக்கில்ல, வயத்துக்கில்ல வருஷத்துக்கொன்னாப் பெத்துக்கிறதில குறைச்சலில்லன்னு மூஞ்சிக்கெதுக்கவே கேக்கறா. ஏண்டி எங்கயானும் ஆஸ்பத்திரி போயி இல்லேன்னு பண்ணிண்டு வந்து தொலையறதானேன்னு கேக்கறா.” என்று உரலில் மிளகாய்ப் பொடியை மசித்துக்கொண்டு ஒருநாள் அக்காவிடம் கண்ணீர் வடித்ததை பார்த்திருக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/65&oldid=1101870" இலிருந்து மீள்விக்கப்பட்டது