பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

ரோஜா இதழ்கள்

அதெல்லாம் அக்காவின் நெஞ்சத்தைத் தொட்டுக் கரைக்கச் செய்யும் சொற்கள் தாமோ?

வீட்டை அவளிடம் விட்டுப் போனாள் என்றால் இப்படி உக்கிராண அறையைக் கைப்பற்றுவதும் குடும்பத்தோடு புகுந்து காப்பி குடிப்பதும் நேர்மையான செயல்களா?

மைத்ரேயி பற்களைத் துலக்கப் போகிறாள். நித்யமல்லிகைப் பந்தலில் வெண்மையான மொட்டுக்கள் அவளைப் பார்த்துச் சிரிக்கின்றன. திரும்பிவந்துவிட்டாயா? திரும்பி வந்துவிட்டாயா? என்று கேட்பதைப் போல் கொட்டிலிலுள்ள கபிலாவும் நந்தினியும் பார்க்கின்றன. கொட்டிலைச் சுத்தம் செய்ய இன்னும் முனியம்மா வரவில்லை போலிருக்கிறது.

மைத்ரேயி தாழ்வரையில் கால்வைக்கு முன்பே மதுரம் சிரித்துக்கொண்டு காப்பியை அவளிடம் கொடுக்கிறாள்.

சிரிப்பு மனசுக்கு இதமாக இருக்கிறது. சிறு வாகான உடல்தான். ஆனாலும் வறுமை, சிறுமைகளை உள்ளடக்கிக் கொண்டு எழும்பும் சிரிப்பு. மதுரம் மாமியின் அடர்ந்த கைகொள்ளாத முடி எண்ணெய்ப் பசையின்றி ஊட்டமும் பொலிவும் இன்றி அலட்சியமாக முடியப் பெற்றிருந்தாலும் அதன் செறிவே ஒரு அழகாக இருக்கிறது. வீட்டுப்படி ஏறியதும் இப்படிச் சிரித்துக் கொண்டு யாரோ காபி கொடுக்கப் போகிறார்கள் என்பதை அவள் கற்பனைகூடச் செய்து பார்க்கவில்லையே?

“அப்ப, நான் பட்டணம் வரை போறேன். நீ இதுகெளெல்லாம் கூட்டிண்டு ஆத்துக்குப்போ. நீ என்னடா பண்ணப்போறே சீனு?”

அன்றைய ‘நிகழ்ச்சி நிரலை’ப் பற்றி அப்போதுதான் திட்டமிடுவது போல் கேட்கிறான் மதுரத்தின் கணவன்.

சீனுவுக்கு இன்னமும் மீசை முளைக்கவில்லை. ஆனாலும் வெற்றுக் கச்சையுடன் உடம்பைக் காட்டிக்கொண்டு நிமிர்ந்து நிற்கும் அவனை அப்படிப் பார்க்க மைத்ரேயிக்குக் கூச்சமாக இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/66&oldid=1101872" இலிருந்து மீள்விக்கப்பட்டது