68
ரோஜா இதழ்கள்
மதுரம் மாமியை உப்புமா கிளறச் சொல்லிவிட்டு அவள் தோட்டக் கிணற்றை வந்து எட்டிப் பார்க்கிறாள்.
தண்ணீர் மிகவும் அடியில் இறங்கியிருக்கிறது. இன்னமும் காற்றுக் காலம்வந்தால் வற்றும்.
பம்ப்பை இயக்கும் மின்விசைக்கான பித்தானை அவளால் தட்டிவிடமுடியாது. அறைக்கதவு பூட்டியிருக்கிறது. எனவே குளியலறைக்கருகில் உள்ள சிறிய கிணற்றில் தான் அவள் நீரிழுத்து முழுகவேண்டும்.
துறவுக் கிணற்றில் முன்பு ஏற்றம் இறைக்கும் வசதிதான் இருந்ததாம். அத்திம்பேர்தான் மின்னாற்றலால் இயங்கும் பம்பு வைத்தார். அதை வேறு யார் தொட்டமுக்கினாலும் அவருக்குப் பிடிக்காது.
...ஒரு சிறிய ஒழுங்கீனத்துக்கே பொறுமை இழப்பவர் அவர்.
அவளை, அவளை மன்னிப்பார்களோ?
அவளால் மீண்டும் விட்டபடிப்பைத் தொடர முடியுமோ?
பெண்களெல்லாம் ஓடிப் போனவள், வழுக்கி விழுந்தவள் என்று அவளைக் குத்தி இழுப்பார்களோ?
தலைமையாசிரியர் அத்திம்பேரைப் போலவே சிறிய ஒழுங்கீனத்துக்கும் பொறுமை இழப்பவர்.
அவர் மறுபடியும் அவளுடைய நிழலைக்கூடப் பள்ளிக் கூடத்தில் அநுமதிக்கமாட்டார்.
இந்த உண்மைகளெல்லாம் அவளுக்கு முன்பே நெஞ்சில் பதிந்து இருந்தும், எப்படிச் சென்ற நாலைந்து மாதங்களில் அவற்றை அவள் மறந்து போனாள்?
இப்போது இந்த இடை நாளைய வாழ்வின் சுவடுகளைக்கூட அடியோடு நினைவிலிருந்து கெல்லி எறிந்துவிட முடியுமாயின் எவ்வளவு நன்றாக இருக்கும்!
சை! என்ன இழிவு? ஒருவனுடைய உடலுக்கு ஆசைப்பட்டுத் தன்னைக் குலைத்துக் கொண்டதாகத்தானே ஆயிற்று?