பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

71

மின் ஊசிகள் பாய்ந்தாற்போல் இருக்கின்றன.

தரையைத் தொட்டுக் குழிபறித்துத் தலையைத் தாழ்த்த இயலாமல் தன்மானம் என்ற ஒன்று தடுக்கிறது.

ஈரத்துணிகளுடன் அவள் நடக்கிறாள். அந்தச் சூழலில் மரங்களும் மண்தறிகளும்கூட அவளை வாஞ்சையோடு பார்ப்பதாகத் தோன்றுகின்றன. ஒற்றைக் கீலில் நிற்கும் வாயிற் கதவு, ‘போய் வருகிறாயாம்மா’ என்று கேட்பதாக நினைத்துக் கொள்கிறாள். நான் எங்கே வரப் போகிறேன்? கோயில் குளத்தில் விழுந்து பிராணனைவிட்டால் ஊரும் உலகமும் இன்னார் வீட்டுப் பெண் என்று சொல்லும். அப்போதுகூட இந்த வாயிற்படி வழியாகக்கொண்டு வரமாட்டார்கள்...’

“நான் போகிறேன்!”

அவள் வாயிலைத் தாண்டிப் பத்தெட்டுக்கூட நடந்திருக்க மாட்டாள்.

மதுரம் அவளுடைய பையையும் துக்கிக்கொண்டு விடு விடென்று வருகிறாள். அவள் தோளைப் பிடித்து நிறுத்து கிறாள்.

“இந்தா பை...”

“பை என்னத்துக்கு மாமி எனக்கு? இந்தாங்கோ இந்த ஈரமும் அதில் இருக்கட்டும்.”

அழுகை வெடித்து வருகிறது. மதுரம் அந்த ஈரத்துணிகளை வாங்கிக் கொள்கிறாள். “எங்கே போறே இப்ப?”

“எனக்கு.போக்கிடம் எங்கே இருக்கு ?...வரமுடியாத இடத்துக்குத்தான் போகணும்.”

“அசடு, என்ன ஆயிட்டுது இப்ப? நம்மாத்துக்கு நட, சொல்றேன்!”

மைத்ரேயி அதிசயமாய் அவளை நோக்குகிறாள்.

‘நம்மாம்’ அப்படி அவளை வரவேற்கும் இடம் ஒன்று இருக்கிறதா? வழி பிறழ்ந்து சென்ற அவளுக்கு அப்படியும் ஒரு இடம் இருக்கிறதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/73&oldid=1101893" இலிருந்து மீள்விக்கப்பட்டது