பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

75

“என்ன பண்ணியிருப்பான்? நாலுபடி அரிசிக்கு அஞ்சோ ஆறோ கிடைச்சிருக்கும். தேங்காய்க்கு ரெண்டு ரூபா கிடைச்சிருக்கும்...”

“கத்தாதேடி, குரங்கு!” என்று வெறுப்பை உமிழ்ந்து விட்டு மதுரம் சட்டென்று திரும்பிப் பார்க்கிறாள். மைத்ரேயியை கண்கள் சந்திக்கையில் மின்விளக்கைப் பொருத்தினார் போல் பளிச்சென்று புன்னகை விளங்குகிறது இதழ்களில்.

“வாம்மா, ஏன் வெளியிலேயே நிக்கறே? உள்ளே வா. இவ என் தங்கை சொர்ணந்தான், யாருமில்லை.”

பந்தலாகத் தெரியும் கூரையின் கீழ் ஒரு அறை, பின் தாழ்வரைக்குச் செல்ல ஒரு வாயில். புழுதியைத் தள்ளித் துடைத்த தரை. சிக்குப் பிடித்த தகரங்கள், அலுமினிய வட்டைகள் போன்ற தட்டுமுட்டுக்கள். மூலையில் நாலைந்து கந்தற்பாய்கள். சிக்குப் பிடித்த இரண்டு தலையணைகள். மேலே ஒரு கொடியில் மதுரம் மாமியின் ஒன்பது கஜம் மாற்றுச் சேலையும், அழுக்குப் பற்றிய மக்கள் உடுப்புகளும் தொங்குகின்றன. ஒரு மூலை ஸ்டாண்டில் ஒரு சுவரொட்டி சிம்னி விளக்கு வீற்றிருக்கிறது. மருண்டாற் போல் மைத்ரேயி நிற்கையில் ஈரப்புடவை, பாவாடையை எடுத்து உதறி மதுரம் அந்தக் கொடியில் உள்ள துணிகளை ஒதுக்கி விட்டுப் போடுகிறாள்.

இதற்குள் ஒரு பையன் அவள் கையைப் பற்றிக் கொண்டு உரிமை கொண்டாடுகிறான்.

“நீ அக்காதானே?” என்று உறவு முறை கேட்கிறான்.

மதுரம் பார்த்துவிட்டுச் சிரிக்கிறாள். “அக்காதான். விளையாடிண்டிருங்கோ, இதோ வரேன்...” என்று சொல்லிவிட்டு வெளியே செல்கிறாள்.

சிறிது நேரம் அவள் அந்தச் சிறு பையனிடம் பேச்சுக் கொடுத்து, அக்காவாக நடிக்க முயலுகிறாள்.

‘ஸ்கூல் போறியா, நீ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/77&oldid=1101903" இலிருந்து மீள்விக்கப்பட்டது